புதுடெல்லி: இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவை சிறு சிறு பகுதிகளாக உடைத்துவிடுவேன் என ஜெய்ஷ்-இ-முகமது (ஜெஇஎம்) தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் அஜிஸ் கடந்த மாதம் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானின் பஹவல்பூரில் அப்துல் அஜிஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சமூக ஊடகங்கள் இதை உறுதிப்படுத்தி இருப்பதுடன், பஹவல்பூரில் அஜிஸ் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்துள்ளன. ஆனால், பாகிஸ்தான் அதிகாரிகளோ ஜேஇஎம் அமைப்போ இந்த தகவலை இதுவரை உறுதி செய்யவில்லை.
காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த மே 7-ம் தேதி துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில் பஹவல்பூரில் இருந்த ஜெஇஎம் அமைப்பின் முகாமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.