ஜகார்ட்டா,
இந்தோனேசியாவில் கடந்த 2022-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி, திருமணம் கடந்த உறவு வைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டது. குறிப்பாக இந்தோனேசியாவின் ஆசே மாகாணத்தில், இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி திருமணமாகாத ஜோடி பாலியல் உறவு கொள்வது சட்டவிரோதமாகும்.
இந்த நிலையில், திருமணம் கடந்த உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக பண்டா ஆசே நகரில் ஒரு காதல் ஜோடிக்கு பொதுவெளியில் 100 சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர சூதாட்டம், மது அருந்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக மேலும் 3 பேருக்கு மொத்தம் 49 சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட்டது.
தண்டனை வழங்கப்படும் சமயத்தில் மருத்துவ உதவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. சவுக்கடி தண்டனை வழங்குவதன் மூலம் குற்றம் இழைத்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து திருந்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாக பண்டா ஆரே நகர மேயர் இலிசா ஜமால் தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்தோனேசியாவில் உள்ள மனித உரிமை அமைப்புகள் இந்த தண்டனையை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.