புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடுமையான பதிலடியை தந்தது. அப்போது, பாகிஸ்தானுக்கு சொந்தமான 9 விமானங்கள் அழிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: மே மாத தொடக்கத்தில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை தொடங்கிய பிறகு பாகிஸ்தானின் வான்வழி மற்றும் தரைவழி ராணுவ சொத்துகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. வான்வழி தாக்குதல் நடவடிக்கைகளின்போது பாகிஸ்தான் விமானப் படைக்கு சொந்தமான 6 விமானங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. மேலும், இரண்டு உயர்திறன் கண்காணிப்பு விமானங்கள் அழிக்கப்பட்டன. ட்ரோன் மூலம் குறிப்பிட்ட இலக்கை தாத்குவதன் மூலம் சி-130 ஹெர்குலில் போக்குவரத்து விமானம் அழிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானுக்கு சொந்தமான 9 விமானங்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முற்றாக தகர்க்கப்பட்டன. உயர் மதிப்பு கண்காணிப்பு பிரிவில் பாகிஸ்தானின் 2 விமானங்களை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கி அழித்தது நான்கு நாள் நடைபெற்ற போரில் முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 10-ம் தேதி பிற்பகலில், கடுமையான ராஜதந்திர அழுத்தம் மற்றும் போர்க்கள பின்னடைவுகளைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ மேஜர் ஜெனரல் காஷிப் அப்துல்லா, தனது இந்திய சகாவான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கயை தொடர்பு கொண்டு உடனடி போர் நிறுத்தத்தைக் கோரினார்.
அதைத் தொடர்ந்து, இந்தியா ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டது, ஆனால், பாகிஸ்தான் மீண்டும் ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்டால் பதிலடி நடவடிக்கை மீண்டும் தொடங்கும் என்று இந்தியா எச்சரிக்கை விடுத்தது.