கூட்ட நெரிசல் விவகாரம்: பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சஸ்பெண்ட்

பெங்களூரு,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை என்பதால் அந்த அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.

இதையடுத்து, கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதான சவுதாவிலும் (சட்டசபை வளாகம்), பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திலும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி சின்னசாமி மைதானத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் திரண்டு வந்தனர்.

இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. போதிய முன்னேற்பாடுகள் இன்றி வெற்றிக்கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ததே இந்த துயர நிகழ்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த துயர சம்பவத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறியதற்காக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பி.தயானந்தா உள்பட பல்வேறு மூத்த காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். அதோடு, கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.