தமிழகத்தில் ஜூன் 9-ம் தேதி வரை பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை 4 நாட்களுக்கு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (ஜூன் 6) ஓரிரு இடங்களிலும், வரும் 7 முதல் 9-ம் தேதி வரை சில இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்), லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 10-ம் தேதி சில இடங்களில், 11-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், மதுரை மாவட்டம் கள்ளந்திரி, சென்னை பாரிமுனை, அயப்பாக்கம் ஆகிய இடங்களில் 3 செ.மீ., சென்னை கொளத்தூர், அயனாவரம், தண்டையார்பேட்டை, பெரம்பூர், காசிமேடு, மாதவரம், வில்லிவாக்கம், அமைந்தக்கரை, ஆட்சியர் அலுவலகம், அம்பத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, தொண்டி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறை, சோலையாறு, உபாசி, சின்கோனா ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.