நத்தம்: நத்தம் அருகே அஞ்சுகுழிபட்டி சுங்கச்சாவடியைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் அஞ்சுகுழிப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சுமார் 270 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. இதை நான்கு வழிச்சாலையாக மாற்றாமல், இருவழிச்சாலையில் விரிவாக்கப்பணி மட்டுமே நடந்துள்ளது. நத்தம் வரை சாலை முழுவதும் பணிகள் முழுமையடையாமலும் உள்ளது.
சாலை விரிவாக்கப்பணியின்போது அஞ்சுகுளிப்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இருந்தபோதும் இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இந்நிலையில், அஞ்சுகுழிப்பட்டி சுங்கச்சாவடியில் வாகன எண்களைப் பதிவு செய்யும் ஸ்கேனர் கருவிகள், தடுப்புகள், கட்டண வசூல் அறைகள் புதுப்பிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் சுங்கச்சாவடியில் கூடினர்.
அங்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு சாலைப்பணிகள் முழுமையடையவில்லை. நான்கு வழிச்சாலை அமைக்கப்படவில்லை எனக் கூறி சுங்கச்சாவடியைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, தடுப்புகளை அகற்றக் கோரினர். இதைத் தொடர்ந்து தடுப்புக்களைத் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர். சுங்கச்சாவடியைத் திறக்கக் கூடாது என ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் கூறிவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.