புதுடெல்லி: மத்திய வக்பு கவுன்சிலை சமூகத்துக்கான சேவையில் மேலும் வலுவானதாகவும், பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மத்திய வக்பு பவனில் ‘தாயின் பெயரில் ஒரு மரம் நடுதல்’ என்ற கருப்பொருளின் கீழ் மரம் நடும் சிறப்பு பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கிரண் ரிஜிஜு, “மத்திய வக்ஃப் கவுன்சிலை சமூகத்துக்கான சேவையில் மேலும் வலுவானதாகவும் பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். வக்பு சொத்துகளை நிர்வகிப்பதற்கான சட்ட மற்றும் நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்தவே வக்பு திருத்தச் சட்டம், 2025 இயற்றப்பட்டுள்ளது.
சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பான மத்திய வக்பு கவுன்சில், 1964-ஆம் ஆண்டு வக்பு சட்டம், 1954-இன் விதிகளின்படி, வக்பு வாரியங்களின் செயல்பாடு மற்றும் வக்பு சொத்துகளின் நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாக அமைக்கப்பட்டது. இதுபோன்ற சிறுபான்மை நிறுவனங்களை அதிகாரம் செய்வதற்கும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் தொடர்ந்து முயன்று வருகிறது.
உமீத் (UMEED) மத்திய இணையதளம் நாளை (ஜூன் 6) செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த போர்டல், வக்பு சொத்து ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி பதிவு செய்வதற்கும், வெளிப்படைத்தன்மை, நிர்வாகம் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் உதவும். 9 லட்சத்துக்கும் மேற்பட்ட வக்பு சொத்துகள் அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். இதை உறுதி செய்ய, மாநில அரசுகளும் வக்பு வாரியங்களும் தரவை தீவிரமாக பதிவேற்றி நிர்வகிக்க வேண்டும்” என தெரிவித்தார்.