12 நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை: அதிபர் டொனால்டு ட்ரம்ப் நடவடிக்கை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது முதல் முறை பதவிக்காலத்தில் இருந்தே பயணத் தடை கொள்கையை அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில், ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு தற்போது 12 நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளார். அதற்கான பிரகடனத்தில் புதன்கிழமை அதிபர் கையெழுத்திட்டுள்ளார்.

எந்த நாடுகள்? – 12 நாடுகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு முழு நுழைவுத் தடைகளை எதிர்கொள்கின்றன. அவை: ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ குடியரசு, ஈக்வடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் நாடுகளாகும்.

பகுதி கட்டுப்பாடுகள்: அமெரிக்க அதிபர் உத்தரவுப்படி, புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள் “அதிக அளவிலான ஆபத்தை” ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்படுகின்றன, இருப்பினும் பிரகடனத்தில் இந்த நாடுகளின் நுழைவை முழுமையாகத் தடை செய்யவில்லை.

அமெரிக்க அதிபரின் புதிய பயண தடை உத்தரவு திங்கள்கிழமை நள்ளிரவு 12.01 மணிக்கு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேருவதை தடுக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் ட்ரம்ப் பயண தடைக்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், “ ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களை தொடர்ந்து அனுமதிப்பது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.