திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை அலிபிரி அல்லது ஸ்ரீவாரி மெட்டு மார்க்கமாக மலையேறி செல்லும் பக்தர்களுக்கு பாதி வழியில் திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. மேலும் ஒரு லட்டு பிரசாதமும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இதனை ஜெகன் ஆட்சியில் ரத்து செய்தனர்.
தற்போது சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வரானதும், திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, இன்று ஜூன் 6-ம் தேதி மாலை 5 மணி முதல் அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் திவ்ய தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதற்காக 10 விநியோக கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 திவ்ய தரிசன டோக்கன்களுக்காகவும், மீதமுள்ள 4 கவுன்டர்கள் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் மையங்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமலையில் வரும் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. அபிஷேகத்திற்கு பின்னர் தங்க கவசத்தை களைந்து முதல்நாள் வைர கவசமும், 2-ம் நாள் முத்து கவசமும், 3-ம் நாள் மீண்டும் தங்க கவசமும் மலையப்பர் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.