மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட 4 வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலும், அதிமுக வேட்பாளர்கள் 2 பேர் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையிலும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகரன் ஆகிய 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 புதிய எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் அதிகாரியாக தமிழக சட்டப்பேரவை செயலக கூடுதல் செயலர் சுப்பிரமணியன், உதவி தேர்தல் அதிகாரியாக பேரவை செயலக இணை செயலர் கே.ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி, தமிழக சட்டப்பேரவையில், எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும். அந்த வகையில், திமுக சார்பில் 4 இடங்களுக்கு பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அதிமுக சார்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கடந்த 2-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் 2 சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டபடி, திமுக, அதிமுக வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். முதலில், பகல் 12 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுக வேட்பாளர்கள் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகிய 4 பேரும் தங்களது வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரி சுப்பிரமணியனிடம் வழங்கினர். அப்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜேந்திரன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, கூட்டணி கட்சி தலைவர்கள் செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), திருமாவளவன் (விசிக), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஜவாஹிருல்லா (மமக), முகமது அபுபக்கர் (ஐயுஎம்எல்) ஆகியோர் உடன் இருந்தனர்.
இதை தொடர்ந்து, பகல் 1 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் அக்கட்சி வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். கட்சி நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சு.ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த அக்னி ஆழ்வார் என்ற சுயேச்சை வேட்பாளரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரத்தை சில்லறை நாணயங்களாக செலுத்தினார்.
இதுவரை 9 பேர் மனு தாக்கல்: பக்ரீத் பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காரணமாக இன்றும், நாளையும் அரசு விடுமுறை என்பதால் மனு தாக்கல் நடைபெறாது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய 9-ம் தேதி கடைசி நாள். மனுக்கள் பரிசீலனை 10-ம் தேதி நடைபெறும். மனுக்களை வாபஸ் பெறும் அவகாசம் 12-ம் தேதி நிறைவடைகிறது.
திமுக, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் 6 பேர் மற்றும் 3 சுயேச்சைகள் என இதுவரை 9 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனுவுடன் 10 எம்எல்ஏக்களின் முன்மொழிவு கடிதத்தை இணைக்க வேண்டும். எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். ஒருவேளை போட்டி இருந்தால் ஜூன் 19-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படாத பட்சத்தில், திமுக, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள்.