‘ஆபரேஷன் சிலந்தி வலை’ தாக்குதலுக்கு பதிலடி: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் – நடந்தது என்ன?

உக்ரைன் மேற்கொண்ட ஆபரேஷன் சிலந்தி வலை தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டின் மீது ரஷ்யா 400 ட்ரோன்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஏவுகணை வீசி மிகப் பெரிய தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனில் 6 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயம் அடைந்தனர்.

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க உட்பட பல நாடுகள் முயன்று வருகின்றன. ஆனால், இது பலனளிக்கவில்லை. இந்நிலையில் ரஷ்யாவின் 5 விமானப்படை தளங்களை குறிவைத்து, உக்ரைன் கடந்த 1-ம் தேதி ஆபரேஷன் சிலந்தி வலை என்ற பெயரில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் தொலை தூர பகுதிக்குள் லாரிகள் மூலம் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்கள் கொண்டு செல்லப்பட்டு ரஷ்யாவின் குண்டு வீச்சு விமானங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 41 விமானங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. உக்ரைனின் இந்த தாக்குதல் ரஷ்யாவை அதிர்ச்சியடைச் செய்தது.

இந்த தாக்குதலுக்காக உக்ரைனுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசிய ரஷ்ய அதிபர் புதின் கூறினார். அதன்படியே உக்ரைனின் கீவ், லிவிவ் மற்றும் சுமி உட்பட 9 முக்கிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா நேற்று முன்தினம் இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. உக்ரைன் மீது 400 ட்ரோன்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கீவ் நகரில் தீயணைப்பு வீரர்கள் 3 பேரும், லட்ஸ்க் நகரில் பொது மக்கள் இருவரும், செரினிஹிவ் பகுதியில் ஒருவரும் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

‘‘உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள லிவிவ் நகரிலிருந்து, தென்கிழக்கு பகுதியில் உள்ள சுமி வரை 9 பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயம் அடைந்தனர்’’ என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஷ்ய ராணுவ அமைச்சகம் கூறுகையில், ‘‘ உக்ரைன் நடத்திய தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது’’ என்றது. ஆனால், இது முழு அளவிலான பதிலடியா அல்லது உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா அதிபர் புதின் இன்னும் தீவிரப்படுத்துவாரா என்பது தெரியவில்லை.

உக்ரைன் பதில் தாக்குதல்: ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து,மாஸ்கோ உட்பட ரஷ்யாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. மேலும் நெப்டியூன் ரக ஏவுகணைகளையும் வீசியது. இதில் 174 ட்ரோன்கள், 3 ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து ரஷ்யா அழித்தது. ரஷ்யாவின் பெல்கோராட் ரயில் நிலையத்தில் மட்டும் குண்டு வெடிப்பு சத்தம்கேட்டது. குர்ஸ்க் பகுதியில் ரஷ்யாவின் ஒரு சுகோய்-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம்: ரஷ்யா நடத்திய தாக்குதலில், உக்ரைன் தலைநகரமான கீவ் நகரில் தீயணைப்பு வீரர்கள்3 பேரும், லட்ஸ்க் நகரில் பொதுமக்கள் 2 பேரும், செரினிஹிவ் பகுதியில் ஒருவரும் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் உக்ரைன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கிய கட்டிடங்கள் சேதம் அடைந்தன. கீவ் நகரில் பல வீடுகள் தீப்பற்றி எரிந்தன. இதனால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.