புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் இந்திய மொழிகள் பிரிவை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியின்போது அவர் பேசியதாவது;-
“இந்தியாவின் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடர்புடையது. ஒரு மொழி இல்லாமல் இன்னொரு மொழியின் வளர்ச்சி சாத்தியமாகாது. ஆறுகள் ஒன்றிணைவது போல் நமது மொழிகள் ஒன்றிணைந்து இந்திய கலாசாரம் என்ற கங்கையை உருவாக்குகின்றன.
இந்திய மொழிகள் நமது கலாச்சாரத்தின் ஆன்மாவாகும். கலாச்சாரம் இந்தியாவின் ஆன்மாகும். இந்திய மொழிகள் பிரிவு அனைத்து மொழிகளுக்கும் ஒரு வலுவான மற்றும் சீரான தளத்தை வழங்கும். இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையை உள்ளடக்கியதாக இது விளங்கும்.
வெளிநாட்டு மொழிகளின் செல்வாக்கிலிருந்து நிர்வாகத்தை விடுவிப்பதற்கான முயற்சியில் இந்திய மொழிகள் பிரிவு ஒரு மைல்கல்லாக இருக்கும். நமது சிந்தனை, பகுப்பாய்வு மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகள் நமது தாய்மொழியில் இருக்கும்போது மட்டுமே நமது திறனை முழுமையாக பயன்படுத்த முடியும்.
மொழிகளின் உணர்வு, செழுமை மற்றும் உணர்திறன் ஆகியவற்றை குறைக்காமல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆங்கிலத்தை நம் மீது திணிப்பதற்கு எதிரான போராட்டத்தில் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இந்திய மொழிகள் பிரிவு நிறுவப்பட்டதன் மூலம், அலுவல் மொழித்துறை இப்போது ஒரு முழுமையான நிறுவனமாக மாறியுள்ளது.”
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.