பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள். பின்னர் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், கொரோனா முறைகேடுகள் குறித்து விசாரிக்க முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டார்.
இதற்காக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா தலைமையில் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிபதியும் விசாரணை நடத்தி பா.ஜனதா ஆட்சியில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி அரசிடம் அறிக்கைகள் வழங்கினார். அந்த அறிக்கையின்படி விதானசவுதா போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா தலைவர்கள் மீது வழக்கும் பதிவாகி உள்ளது.
தற்போது கொரோனா சந்தர்ப்பத்தில் சாம்ராஜ்நகரில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் உயிர் இழந்தது குறித்து ஜான் மைக்கேல் குன்கா விசாரித்து வருகிறார். அதே நேரத்தில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 11 பேர் பலியானது குறித்து அவரது தலைமையில் நீதி விசாரணை நடத்தி, ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஒரு மாதம் 11 பேர் பலி குறித்து மட்டுமே அவரால் விசாரணை நடத்த முடியும் என்பதால், கொரோனா முறைகேடு குறித்து விசாரிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை ஒரு மாதம் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்டு 1-ந் தேதி பதில் ஆகஸ்டு 31-ந் தேதி வரை தனிநபர் நீதிபதியின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.