திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் எலமனூர் பகுதியில் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு கொடிங்கால் வாய்க்கால் தூர் வாரப்படாமல் இருந்தது. மேலும், வாய்க்கால், கரைகள் இருந்ததே தெரியாமல் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து, காணாமல்போன கொடிங்கால் வாய்க்கால் மற்றும் கரைகளை கண்டுபிடித்து தருமாறு அப்பகுதி விவசாயிகள், முதல்வரின் முகவரி துறைக்கு மனு அனுப்பினர்.
இதையடுத்து, ஆக்கிரமிப்பில் இருந்த கொடிங்கால் வாய்க்கால் மற்றும் கரைகள் அளவீடு செய்யப்பட்டது. தற்போது அங்கு தூர் வாரும் பணி நடைபெறுகிறது. கரையே இல்லாமல் இருந்த இந்த வாய்க்காலில் ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம் கரைகளை அமைக்க முயற்சி செய்து வருகிறது.
வருவாய்த் துறை ஆவணத்தின்படி கொடிங்கால் வாய்க்காலின் அகலம் கிட்டத்தட்ட 68 மீட்டர் அதாவது 220 அடி முதல் (22 மீட்டர்) – 72 அடி வரை என உள்ளது. அதன்படி, எலமனூரில் 2 கிலோமீட்டர் நீளம் உள்ள வாய்க்கால் வருவாய்த் துறையினரால் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன.
30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாய்க்கால் தூர் வாரப்படாததால், வாய்க்காலின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வாய்க்காலிலேயே ஆங்காங்கே விவசாயம் செய்யப்படுகிறது. 400-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், மாமரங்கள் போன்றவை நடப்பட்டுள்ளன. ஆண்டுக்கணக்காக தொடர்ந்து விடுக்கப்பட்ட கோரிக்கை மற்றும் பெரும் போராட்டத்துக்கு பின்னர் இந்த வாய்க்கால் வருவாய்த் துறையினரால் அண்மையில் அளக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எலமனூர் கிராம விவசாயிகள் சசிகுமார், விருமாண்டி ஆகியோர் கூறியது: “ஆக்கிரமிப்பு, தூர் வாராத காரணத்தால் கொடிங்கால் வாய்க்கால் எங்கு இருக்கிறது என்றுத் தெரியாத நிலை இருந்து வந்தது. முதல்வரின் முகவரி துறைக்கு மனு அளித்ததுடன், ஆற்றுப் பாதுகாப்பு துறை, வருவாய்த் துறை அதிகாரிகளை தொடர்ந்து தொடர்பு கொண்டு வலியுறுத்தினோம். அதையடுத்து, வாயக்கால் அளவீடு செய்யப்பட்டு, தற்போது தூர் வாரப்பட்டு வருகிறது.
அதேவேளையில் முக்கொம்பு ஆற்றுப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் வாய்க்காலை மீட்டு, வாய்க்காலில் ஆக்கிரமித்து நடப்பட்டுள்ள மரங்களுக்கு எண்களிட்டு, தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.
தற்போது தூர் வாரும் பணியில் கொடிங்கால் வாய்க்காலின் அகலம் 40 அடியாக ஆக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களையும் மீட்டு, வாய்க்காலை அதன் முழு கொள்ளளவுக்கு கொண்டுவர வேண்டும். வலுவான கரைகள் அமைக்கபட வேண்டும். அப்போதுதான், வாய்க்காலில் அதிக நீர் வரும்போது மழைக்காலங்களிலும் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்படையாது.
இந்த வாய்க்காலின் இருபுறமும் விவசாய நிலங்கள் உள்ளது. ஆனால், வயலுக்கு செல்லவும், இடுபொருட்களை கொண்டு செல்வவும் விவசாயிகள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகின்றனர். விவசாயிகளின் சிரமத்தை குறைக்க வாய்காலின் இருபுறமும் கரைவழிச் சாலை அமைக்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் அயிலை சிவசூரியன் கூறியது: “கொடியாலம், புலிவலம் பகுதிகளில் 10 வாய்க்கால்களை தூர் வார மனு அளித்திருந்தோம். அனைத்தையும் இந்த முறை சிறப்பாக தூர் வாரி உள்ளனர். அதேவேளையில், குழுமி, தடுப்பணை, மதகுகள் போன்ற பாசன கட்டமைப்புகளையும் சீரமைக்க வேண்டும்” என்றார்.