திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியை அடுத்த முதுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (61). இவரின் மனைவி புவனேஸ்வரி.
இந்தத் தம்பதியினருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் குடியிருக்கும் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் வீட்டின் பின்புறத்தில் கிணறு தோண்ட ஜோதி திட்டமிட்டார்.
அதைத் தொடர்ந்து ஜோதியும் அவரின் மகனும் சேர்ந்து 3 அடி அகலத்தில் 30 அடி ஆழத்துக்குக் கிணறு தோண்டியிருக்கிறார்கள். அந்தக் கிணற்றில் தண்ணீர் வந்ததும் மின் மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்துப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென கிணற்றிலிருந்து தண்ணீர் வரவில்லை. அதனால் சந்தோஷ்குமார், கிணற்றின் அருகே எட்டிப்பார்த்திருக்கிறார்.
அப்போது கால் தவறி சந்தோஷ்குமார் கீழே விழுந்திருக்கிறார். அதைப் பார்த்த ஜோதி அதிர்ச்சியடைந்ததோடு மகனைக் காப்பாற்றக் கிணற்றுக்குள் குதித்திருக்கிறார்.
கிணற்றில் விஷவாயு தாக்கியதில் ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். சந்தோஷ்குமார் உயிருக்குப் போராடினார். இதையடுத்து புவனேஸ்வரி, ‘காப்பாற்றுங்கள்’ எனக் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.
அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். கிணற்றில் விஷவாயு தாக்குதல் இருப்பதால் கயிறு கட்டி முதலில் சந்தோஷ்குமாரை மீட்டனர். ஆனால் ஜோதியை மீட்க முடியவில்லை.
இந்தச் சம்பவத்தில் சந்தோஷ்குமாருக்குத் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த மப்பேடு போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.
கிணற்றுக்குள் சடலமாகக் கிடந்த ஜோதியை மீட்கத் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உரியப் பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றுக்குள் இறங்கி ஜோதியை மீட்டனர்.

அவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வட்டாட்சியர் ரஜினிகாந்த், நேரில் சென்று விசாரித்தார்.
அப்போது அனுமதியின்றி கிணறு தோண்டிய தகவல் தெரியவந்தது. தொடர்ந்து போலீஸாரும் வருவாய்த் துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.