திருப்பூர்: தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் புழக்கம் சமூகத்தில் அதிகரித்துள்ளது. எவ்வித கட்டுப்பாட்டையும் ஏற்படுத்த காவல்துறையால் முடியவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன், பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருப்பூர் வந்த நிலையில் இன்று (ஜூன் 7) செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா மதுரை வருவது கட்சியினருக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுப்பது மட்டுமல்ல அதிமுக உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளுக்கு பலம் சேர்க்கும்.
தற்போது தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் வலுவான, பலமான கூட்டணியாக மக்களுடைய ஆதரவு பெற்ற கூட்டணியாக உள்ளது. எங்களது நோக்கம் ஆட்சி மாற்றம் தான். இந்த முக்கிய நோக்கத்துக்கு, தமிழகத்தில் உள்ள புதிய கட்சிகளாக இருந்தாலும், பழைய கட்சிகளாக இருந்தாலும் சரி இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது தமாகவின் விருப்பம்.
கல்வியில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகளை அரசியல் கட்சியின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் மாணவ மாணவிகளை ஊக்குவிப்பதற்காக பரிசு வழங்குவது வழக்கமான ஒன்றுதான். அப்படி இருக்கும்போது பெற்றோர்களே மாணவர்களை அழைத்துக்கொண்டு வரும்போது பெருமைப்படும்போது அதை வாழ்த்துவது நமது கடமையாக இருக்கிறது. அதைப்பற்றி விமர்சிப்தோ அரசியல் ஆக்குவதோ கூடாது.
ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பது, கர்நாடக காங்கிரஸ் ஆட்சியின் சரியான திட்டமிடல் இல்லாததை காட்டுகிறது. மேலும், போலீஸாரின் செயல் இழந்த பணிதான் காரணம். தமிழகத்தில் நடைபெறும் 4 ஆண்டுகால திமுக ஆட்சியில், சாதனை ஒன்றும் இல்லை, வேதனையான சாதனைகள் தான் உள்ளன. மக்களுக்கு கொடுத்துள்ள எந்த ஒரு வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெற்று வருகிறது.
4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட நிலையிலே உள்ளன. சட்டம் ஒழுங்கை சரி செய்யாத அரசாக திமுக அரசு உள்ளது. இந்த அரசு தொடர்ந்து செயல்படுவது வெட்கக்கேடான செயல். கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் புழக்கம் சமூகத்தில் அதிகரித்துள்ளது. எந்தவிதமான ஒரு கட்டுப்பாட்டையும் ஏற்படுத்த காவல்துறையால் முடியவில்லை. அரசின் செயல்பாடும் அதற்கு ஏற்றவாறு அமையவில்லை. வரும் 10 மாத காலங்களில் அவர்களால் இதை எந்த விதத்திலும் சரி செய்ய முடியாது என்ற அவநம்பிக்கைக்கு மக்கள் சென்றுள்ளனர். எதிர்ப்பு அலை அதிகரித்து வருகிறது.
திருப்பூர் மாநகராட்சியில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. சாலை வசதி சரியில்லாமல், குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் தொழில் வளர்ச்சிக்கான சூழ்நிலை திருப்பூரில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.