தைலாபுரத்தில் 22 நாள் ஆலோசனைக்குப் பின் சென்னையில் ராமதாஸ் – அரசியல் முக்கியத்துவம் என்ன?

திண்டிவனம் / சென்னை: மதுரைக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவுள்ள நிலையில், தைலாபுரத்தில் கடந்த 22 நாட்களாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னைக்கு இன்று (ஜூன் 7) காலை பயணித்திருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மகள் வழி பேரன் ‘முகுந்தனுக்கு அரசியல் பட்டாபிஷேகம்’ செய்து வைத்த தனது தந்தையான பாமக நிறுவனர் ராமதாஸுக்கு, தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், இருவருக்கும் இடையே மோதல், ‘விரிசல்’ உருவானது. சென்னைக்கு கடந்த ஏப்ரல் மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் சுற்றுப் பயணம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் கூட்டணியை இறுதி செய்ய முடிவெடுத்த அன்புமணியை, தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக ஒருநாள் முன்னதாக ராமதாஸ் அறிவித்தார். இதனால் கூட்டணி இறுதியாகவில்லை.

இந்நிலையில், 2 நாள் சுற்றுப் பயணமாக மதுரைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வர உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்ய மீண்டும் முயற்சி செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக, ‘தலைமை பண்புக்கு தகுதி இல்லாதவர்’ என கடந்த மே 29-ம் தேதி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸை சந்திக்க தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி கடந்த 5-ம் தேதி காலை சென்றார். 45 நிமிடங்கள் இருந்தார். இருவரும் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

அன்புமணி புறப்பட்டு சென்ற சில மணித்துளிகளில் பாஜக ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்தி, அதிமுக முன்னாள் நிர்வாகி சைதை துரைசாமி ஆகியோர் தைலாபுரத்துக்கு சென்று, ராமதாஸுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர் வெளியே வந்த ஆடிட்டர், ‘பாஜகவுக்காக வரவில்லை. நண்பர் என்ற முறையில் சந்திக்க வந்தேன். என்னை அவருக்கு பிடிக்கும் என்பதால் நீண்ட நேரம் பேசினார்’ என்றார்.

தைலாபுரத்தில் வசிக்கும் ராமதாஸை அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோர் ஓரே நாளில் சந்தித்து, பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்ய நிர்பந்தம் செய்ததாக தெரிய வருகிறது. இந்த சலசலப்பு அடங்குவதற்குள், தைலாபுரத்தில் கடந்த மே 16-ம் தேதி முதல் ஜூன் 6-ம் தேதி வரை என கடந்த 22 நாட்களாக, கட்சி நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டும், ஆலோசைனை நடத்தியும் வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், திடீர் பயணமாக சென்னைக்கு இன்று (ஜூன் 7) காலை 10 மணியளவில் காரில் புறப்பட்டுச் சென்றார்.

தைலாபுரம் வீட்டு நுழைவு வாயில் முன்பு ராமதாஸ் கூறும்போது, “மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை செல்லவில்லை. நான் நல்ல நிலையில் உள்ளேன். குடும்ப உறவுகளை பார்க்கச் செல்கிறேன். என்னை சந்திக்க ஆடிட்டர் குருமூர்த்தி வந்தார், பேசிவிட்டு சென்றுள்ளார். அவரை நான் ரொம்ப மதிக்கிறேன். அவருடனான என்னுடைய நட்பானது நீண்ட நாள் நட்பு. இதேபோல் சைதை துரைசாமி எனக்கு 30 ஆண்டுகளாக பழக்கம். இருவரும் வந்து சந்தித்தனர். அன்புமணியும் என்னை வந்து பார்த்தார், பேசினார். இது தொடர்பாக பின்னர் வந்து சொல்கிறேன்” என்றார்.

சென்னை சென்றடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறும்போது, “ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி என்னை சந்தித்து பேசினர். இருவரும் நீண்டகால நண்பர்கள். ஆடிட்டர் குருமூர்த்தி நல்லவர். நல்ல மனது உடையவர். அறிவாளி. அவர் சொன்னால் நல்லது நடக்கும் என்று நானும் நம்புகிறேன். எல்லோரும் நம்புகிறோம்.

பாஜகவில் இருந்து கூட்டணிக்கு அழைப்பு வரவில்லை. அன்புமணியுடனான கருத்து மோதலால் கட்சியில் எந்த பின்னடைவும் இல்லை. கட்சியில் நிலவி வரும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும். கட்சியில் நடக்கும் பிரச்சினை முடிந்து போன விஷயம். இனி நடக்கப்போவதை பேசுவோம். கட்சியில் எல்லாம் நல்லபடியாக நடக்கும். யாருடன் கூட்டணி என்பது குறித்து பேசி முடிவு செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் வந்து சந்தித்தப் பிறகு, ராமதாஸ் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவர் கூட்டிய மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்த அன்புமணியின் ஆதரவாளர்களான மாநில பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளை கடந்த 4-ம் தேதி வரை நீக்கி வந்தவர், கடந்த 2 நாட்களாக களையெடுப்பு நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில்தான், அவரது திடீர் சென்னை பயணம், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.