கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் இன்று (ஜூன்.7) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை, ஆயங்குடி, நெய்வேலி, மந்தாரக்குப்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.அதன்படி, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆயங்குடியில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனை ஹஜ்ரத் முகம்மதுஆரிப் உலவ்வியு தலைமையில் நடைபெற்றது.
இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின்னர் சகோதரத்துவத்தை போற்றும் விதமாக ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். அந்தந்த பகுதியில் ‘குர்பானி’ கொடுக்கப்பட்ட ஆட்டுக்கறி ஏழைகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது.