கிருஷ்ணகிரி: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பாமகவில் ஒற்றுமை திரும்ப வேண்டியும், சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற வேண்டியும், கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பாமக சார்பில, காட்டுவீர ஆஞ்ச்நேயர் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடந்தன.
மாவட்டச் செயலாளர் மோகன்ராம் தலைமையில், கட்சியினர் கோயிலை 11 முறை வலம் வந்து, வேண்டுதல் தேங்காய் உடைத்தனர். பின்னர், மாவட்ட செயலாளர் மோகன்ராம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.
இது குறித்து மாவட்ட செயலாளர் கூறும்போது, “பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒன்றிணைந்து, கட்சியை வழிநடத்த வேண்டும். இருவரும் ஒன்றிணைவார்கள் என்கிற நம்பிக்கையுடன் கடவுளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். வருகிற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்க வேண்டும்” என்றார்.
வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சோமசுந்தரம், மகளிர் அணி மாவட்டச் செயலாளர் பாரதி, மாவட்ட தலைவர் மாதேஷ்வரி, மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், பசுமை தியாகம் மாவட்டச் செயலாளர் சேகர், பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகி வேலு, முன்னாள் ஒன்றிய செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.