பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்; விராட் கோலிக்கு எதிராக போலீசில் புகார்

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 11 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது. இதுபற்றி சித்தராமையா, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். அவருடைய அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் அறிவித்து உள்ளது.

இந்நிலையில், கப்பன் பார்க் காவல் நிலையத்தில், ஏ.எம். வெங்கடேஷ் என்பவர் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு எதிராக போலீசில் புகார் அளித்து உள்ளார்.

அதனை போலீசார் ஏற்று கொண்டனர். இந்த விவகாரத்தில், முன்பே பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். உடன் சேர்த்து, விசாரணை நடத்த பரிசீலனை செய்யப்படும் என வெங்கடேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று கப்பன் பார்க் காவல் நிலையத்தில் கூடுதலாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ரோலண்ட் கோம்ஸ் என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து, மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் அளித்த புகாரின் பேரில், ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் கூட்டமைப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் டி.என்.ஏ. நிறுவனம் ஆகியவற்றின் மீது வழக்கு பதிவாகி உள்ளது. முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் ஆகியோருக்கு எதிராக எப்.ஐ.ஆர். ஒன்றை பதிவு செய்யும்படி, பா.ஜ.க. சார்பிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.