புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் சூரத்தின் வைர வியாபாரியின் நன்கொடை அதிக விலைமதிப்பு உள்ளவையாகக் கருதப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயிலின் முக்கியக் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. எட்டு துணை கோயில்களின் கர்ப்பக்கிரகங்களுக்கான சிலைகளின் பிராண பிரதிஷ்டைப் பணியும் முடிவடைந்துள்ளன. சமீபத்திய நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
பிரதான ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. எனினும், அருங்காட்சியகம், அரங்கம் மற்றும் விருந்தினர் மாளிகை போன்ற கூடுதல் கட்டுமானப் பணிகள் இன்னும் வளாகத்தில் நடந்து வருகின்றன. ராமர் கதா மண்டபத்தில் கற்கள் பதிக்கும் பணியும் மீதமுள்ளது. இவை அனைத்தும் டிசம்பர் 2025-க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராமர் கோயிலில் இதுவரை 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 கோடி. ராமர் கோயிலின் தரைத்தளத்தில் உள்ள ஒவ்வொரு கதவும் தங்கத்தால் முலாம் பூசப்பட்டுள்ளது. இதனுடன், முக்கியக் கருவறையில் உள்ள குழந்தை ராமர் சிலையின் சிம்மாசனமும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ராமரின் தர்பாரும் வைரம், தங்கம் மற்றும் வெள்ளியிலான அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ராம தர்பாரில் உள்ள சீதையின் அரியணை, ஏழு அடி உயரத்தில் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. சீதைக்கான உணவுத் தட்டு வெள்ளியில் செய்யப்பட்டு தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராமர் நெற்றியில் ஒரு புனித திலகத்தையும், சீதை நெற்றியில் வெள்ளியிலான நெற்றிப் பொட்டும் அணிவித்துள்ளனர். சீதா ராமர் இடுப்பில் ரத்தினம் பதித்த கச்சையை அணிந்துள்ளார். அவர் இரு கைகளிலும் வைரங்களிலான வளையல்கள் அணிந்துள்ளார்.
ராமர் இடது கையில் வெள்ளி மற்றும் தங்கத்தால் ஆன வில்லை ஏந்தியுள்ளார். அவருக்கு புல்லாங்குழலும் உள்ளது. சீதையின் கால்களில் தங்கக் கொலுசுகள் உள்ளன. ராமர் கால்களில் தங்க வளையல் வைத்துள்ளார். அவர் கையில் தாமரை மலரை ஏந்தியுள்ளார். சீதா ராமர் தங்கம், வெள்ளி மற்றும் பிற ஆபரணங்களால் ஆன நெக்லஸை அணிந்துள்ளார்.
இது குறித்து ராமஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்தர் மிஸ்ரா கூறும்போது, “துணைக் கோயில்களின் பிராண பிரதிஷ்டைக்குப் பிறகு, ராமர் தர்பாரின் தரிசனமும் விரைவில் தொடங்கப்படும். இதனால், ராமர் பக்தர்களுக்கு, இந்த கோயில் நம்பிக்கையின் மையம் மட்டுமல்ல, ஆன்மிக மற்றும் கலாச்சார பெருமையின் அடையாளமாகவும் மாறியுள்ளது. ஏராளமான பக்தர்கள் ஒன்றாகச் சென்று பார்வையிட முடியாததால், தரிசனத்துக்கான ஏற்பாடு இன்னும் தயாராகி வருகிறது” எனத் தெரிவித்தார்.
ராமர் கோயிலுக்கு சமீபத்திய நன்கொடைகளில் சூரத்தைச் சேர்ந்த கிரீன் லேப் நிறுவன உரிமையாளர் முகேஷ் பட்டேல் என்பவர் வழங்கியது மிகவும் மதிப்பிற்குரியதாக உள்ளது. இவர், 11 வைரக் கிரீடங்கள், ஒரு தங்க வில் மற்றும் அம்பு உள்ளிட்ட ஆபரணங்களை நன்கொடையாக அளித்துள்ளார். இவற்றில் 30 கிலோ வெள்ளி, 300 கிராம் தங்கம் மற்றும் மாணிக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
கூடுதலாக நெக்லஸ்கள், காதணிகள், நெற்றியில் திலகங்கள் (தெய்வத்துக்கான அலங்கார அடையாளங்கள்), ராமாயணத்தில் உள்ள நான்கு சகோதரர்களைக் குறிக்கும் நான்கு பெரிய மற்றும் மூன்று சிறிய வில், நான்கு அம்பாறாத்தூணிகள், மூன்று தண்டாயுதங்கள் மற்றும் சடங்கு ஈட்டிகள் ஆகியவற்றை நன்கொடையாக பட்டேல் அளித்துள்ளார்.
பட்டேலின் இந்தப் பொருட்கள் சிறப்பு விமானத்தில் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டன. துணைக் கோயில்களின் பிராண பிரதிஷ்டைக்காக, ஆறு புதிய பண்டிதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது ராமர் கோயிலில் பூசாரிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
சேஷாவதர் கோயிலின் சிகரத்தில் தங்க வேலைப்பாடுகள் இன்னும் சிறிது பாக்கி உள்ளன. அதன் பணிகளும் வேகமாக நடைபெறுகின்றன. துணைக் கோயில்களின் பிராண பிரதிஷ்டைக்காக பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த துணைக் கோயில்களை தரிசிக்க இன்னும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பொதுமக்களுக்கான தரிசனம் குறித்து ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையின் நிர்வாகிகள் கூடி முடிவு செய்ய உள்ளனர்.