பெரூட்,
இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவினர் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. தலைநகர் பெரூட் அருகே டஹியா மாவட்டத்தின் புறநகர் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் டிரோன் தயாரிப்பு தொழிற்சாலை அழிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்குமுன் அப்பகுதியில் உள்ள உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.