புதுச்சேரி: புதுச்சேரி அரசு வருவாயை அதிகரிக்க மதுபானங்களைத் தொடர்ந்து பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. புதுவை அரசு ஏற்கெனவே முதியோர் உதவித்தொகையை ரூ.2 ஆயிரத்து 500- ஆக உயர்த்தியுள்ளது.
குடும்பத் தலைவிகளின் மாத உதவித்தொகை ரூ. 2 ஆயிரமாகவும், மஞ்சள் கார்டுக்கு ரூ.1,000-மாகவும் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 500 கோடி கூடுதல் செலவாகும். இதற்கு வருவாயை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி மதுபானங்களுக்கான கலால்வரியை அரசு ஏற்கெனவே உயர்த்தியது. தற்போது பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
புதுவையில் நிலம், மனை விற்கும்போது 10 சதவீத முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வருவாயை பத்திர பதிவு துறை, உள்ளாட்சி துறை தலா 5 சதவீதம் பிரித்துக்கொள்ளும்.
கணினி நகல் பெற கட்டணம்: ஒவ்வொரு ஆண்டும் நிலம், வீட்டு மனை வழிகாட்டு மதிப்பு வெளியிடப்படும். இந்த நில வழிகாட்டி மதிப்பு 1.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி முத்திரைத்தாள் கட்டணம் ரூ.10 ஆயிரத்துக்குள் இருந்தால் பதிவுக்கு ரூ.150 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.10 ஆயிரத்துக்கு மேல் நில மதிப்பு இருந்தால் ஒவ்வொரு ஆயிரத்துக்கும் ரூ.15 உயர்கிறது. கணிணி சார்ந்த நகல்கள் பெறும் கட்டணமும் ரூ.100 என புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்து. இதற்கான உத்தரவை வருவாய்த்துறை சிறப்பு செயலரான ஆட்சியர் குலோத்துங்கன் பிறப்பித்துள்ளார்.