ஆந்திரா மாநிலத்தை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தெலுங்கு தேசம் தலைமையிலான அரசு, தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கட்டாய வேலை நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.
அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் தொழில்களை வளர்ப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொழிலாளர் சங்கங்கள் வன்மையாகக் கண்டித்து வருகின்றன. “இது தொழிலாளர்களை அடிமையாக்கும் சட்டம்” என வாதிடுகின்றனர்.

முதலீடுகளை ஈர்க்க திட்டம்!
8 மணி நேரமாகக் குறைக்கப்பட்டிருந்த தினசரி வேலை நேரம், பத்தாண்டுகளுக்கு முன்பு 9 மணிநேரமாக உயர்த்தப்பட்டது. தற்போது சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை மீண்டும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
வேலை நேரம் மட்டுமல்லாமல் கூடுதல் நேரம், இரவுப் பணிக்கான விதிமுறைகளிலும் திருத்தம் கொண்டுவரவுள்ளனர்.
இதுகுறித்து தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கே.பார்த்தசாரதி பேசுகையில், “அரசாங்கம் வணிகத்தை எளிதாக்கும் கொள்கையின் (Ease of Doing Business – EoDB) படி, இந்தச் சட்டங்களைத் திருத்த முடிவு செய்துள்ளது. விதிகளைத் தளர்த்துவது முதலீடுகளை அதிகரிக்கும்” எனக் கூறியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சி ஆதங்கம்!
மாநில கம்யூனிஸ்ட் கட்சி இந்த முடிவைக் கடுமையாகச் சாடியிருக்கிறது. “மத்திய அரசு பெரிய தொழிலதிபர்களுக்கு இசைந்தளிப்பதற்காக இத்தகைய அழுத்தங்களை ஏற்படுத்துகிறது.
இந்தச் சட்டத் திருத்தங்கள் தொழிலாளர்களை அடிமைகளாக்கும்” எனக் கூறியுள்ளார் சி.பி.எம் மாநிலச் செயலாளர் வி சீனிவாச ராவ்.

தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதை எதிர்த்து நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி வேலை நிறுத்தம் செய்யத் தயாராகி வரும் சூழலில் ஆந்திர அரசு துரதிர்ஷ்டவசமான முடிவை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழிற்சங்கங்கள் அச்சம்!
ஆந்திர தொழிற்சாலைகள் சட்டத்தின்படி, எந்த ஒரு தொழிலாளரும் 9 மணிநேரத்துக்கு மேல் பணியாற்றக் கூடாது. 5 மணிநேர தொடர் வேலைக்குப் பிறகு 30 நிமிடங்கள் இடைவேளை விட வேண்டும்.
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபிறகு, தொழிற்சாலை நிர்வாகம் இரண்டு மணிநேரம் கூடுதலாக வேலை செய்ய (OT) கேட்டுக்கொண்டால், தொழிலாளர்கள் தினமும் 12 மணிநேரம் தொழிற்சாலையில் பணியாற்ற நேரிடும் எனத் தொழிற்சங்கங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.
மேலும் கூடுதல் நேரத்துக்கான அட்டவணையை 75 மணிநேரங்களிலிருந்து 144 மணிநேரமாக உயர்த்தவும் முடிவு செய்துள்ளனர். இதன்பொருள், ஒருவர் 144 மணிநேரம் கூடுதலாகப் பணிபுரிந்த பின்னரே அதற்கான ஊதியத்தைப் பெற முடியும்.
இப்போதைய சட்டத்தின்படி, தொழிலாளர்கள் அடுத்தடுத்து இரண்டு பணி அட்டவணைகளில் பணியாற்றக் கூடாது. அதாவது தொடர்ந்து 16 மணிநேரம் இரண்டு நாட்களுக்கான வேலையைச் செய்யக் கூடாது. ஆனால் ஆந்திர அரசு, இந்த முடிவை நிறுவனத்திடம் விட்டுவிட முயல்கிறது.
வேலை நேரத்தை அதிகரிப்பது தொழிலாளர்களின் உடல் நலனையும் செயல் திறனையும் பாதிக்கும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வரும் சூழலில், ஆந்திர அரசின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து பின்வாங்க வேண்டும் என்பதற்கான கண்டனக் குரல்கள் எழுந்துவருகின்றன.