ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் என்ற இடத்தில் இருக்கும் இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 வயதுள்ள பெண் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இரவு நேரம் அவசர சிகிச்சை பிரிவிற்குள் சென்ற ஆண்செவிழியர் ஒருவர், அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து ஊசி போட்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அரை மயக்கத்தில் இருந்த பெண்நோயாளி எதிர்த்து போராட முயன்றும், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
அப்பெண்ணின் கணவரை அவசர சிகிச்சை பிரிவிற்குள் அனுமதிக்காமல் வெளியில் காத்திருக்க வைத்திருந்த நிலையில், இந்த கொடுமை நடந்துள்ளது.

அந்த பெண் அழுதுகொண்டே தனது கணவர் பெயரை உச்சரித்துள்ளார். உடனே மற்ற செவிலியர்கள் அப்பெண்ணின் கணவரை உள்ளே அழைத்தனர். அவரிடம் அப்பெண் நடந்த சம்பவத்தை சொல்ல முயன்றார். ஆனால் அவர் அரை மயக்க நிலையில் இருந்ததால் அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை. அப்படியே இரவில் உறங்கிவிட்டார்.
காலையில் நடந்த சம்பவம் குறித்து அப்பெண் தனது கணவரிடம் கூறி அழுதுள்ளார். அப்பெண்ணின் கணவர் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தார். ஆனால் நிர்வாகம் நடந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி செய்தது. தவறு செய்த நபர் அனைவர் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார்.
ஆனால் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூடுதல் மாவட்ட நீதிபதியிடம் புகார் செய்தார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பெண்ணிடம் போலீஸார் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். அவர் குற்றவாளியை தெளிவாக அடையாளம் காட்டியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் மகாவீர் கூறுகையில், ”குற்றவாளி முதலில் நோயாளிக்கு மயக்க ஊசி போட்டுள்ளார். அதனை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.
மருத்துவமனை நிர்வாகமும் இது குறித்து விசாரிக்க கமிட்டி அமைத்துள்ளது. மருத்துவமனையில் நோயாளி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு பெண் நோயாளியின் கணவரும், தனது மனைவியை செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.