இந்தியாவில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்குகிறது

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது. இதில் கேரளா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு உருமாற்றம் பெற்ற எல்எப்.7, எக்ஸ்எப்ஜி, ஜேஎன்.1 ஆகிய புதிய வைரஸ்களும் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட என்பி.1.8.1 என்ற துணை திரிபும் காரணமாக உள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரப்படி நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 391 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 5,755 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது. இங்கு 1,806 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து குஜராத் 717, டெல்லி 665, மேற்கு வங்கம் 622, மகாராஷ்டிரா 577, கர்நாடகா 444, உ.பி. 208, தமிழ்நாடு 194, புதுச்சேரி 13, ஹரியானா 87, ஆந்திரா 72, ம.பி 32, கோவா 9 என்ற எண்ணிக்கையில் நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் ம.பி.யில் 45 வயது பெண்மணி, தமிழ்நாட்டில் 79 வயது முதியர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

தற்போது பரவும் கரோனா வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று ஐசிஎம்ஆர் தலைவர் ராஜீவ் பெஹல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தொற்று அதிகரிக்கும் போதெல்லாம், அது எவ்வாறு பரவுகிறது, எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். இதற்கு முன் 2 நாட்களில் கரோனா பாதிப்பு இரட்டிப்பானதை நாங்கள் பார்த்துள்ளோம். ஆனால் இம்முறை கரோனா தொற்று வேகமாகப் பரவவில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.