நார்த்தம்டான்,
இந்தியா ஏ – இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) நார்த்தம்டானில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 89.3 ஓவர்களில் 348 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 116 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி நேற்றைய 2ம் நாளில் 46 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. ஜோர்டான் காக்ஸ் 31 ரன்களுடனும், ஜேம்ஸ் ரெவ் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தரப்பில் அன்ஷூல் கம்போஜ், துஷர் தேஷ்பாண்டே, தனுஷ் கோட்டியான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இந்நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 327 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து லயன்ஸ் தரப்பில் அதிகபட்சமாக எமிலோ ஹே 71 ரன் எடுத்தார். இந்தியா ஏ தரப்பில் கலீல் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 21 ரன் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.