கடல் தாண்டிய சொற்கள்: நீண்டு வளர்ந்து நுனியில் கனிந்தவள் – எமிலி டிக்கின்சன் | பகுதி 12

விழித்த நிலையில் கனவுகாண்பதைப் போல், கவித்துவ மனநிலையிலேயே எப்போதும் திளைத்திருந்தவர் எமிலி டிக்கின்சன். அணைக்கமுடியாமல் எரியும் நெருப்பாக உணர்வுகள் கொந்தளிக்க, தனிமையில் திரியும் மௌனத்துக்கிடையே மெல்லிய கீச்.. கீச்.. ஒலிகளாக அவளது சொற்கள் இன்றைய கவிதை வாசகர்களுக்குள்ளும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. தனக்குள் ஊறிப்போயிருந்த தனிமை அழுத்தியபடி, இனந்தெரியாத வெறுமையில், விட்டுப்போன காதலை நினைத்து ஏங்கும் விசும்பலைக் கவிதைகளாய் எழுதியவள். எமிலியின் சாந்த முகத்திற்குப் பின்னால் இருக்கிறது ஒரு பேரமைதி.

எமிலியின் பெரும்பான்மையான கவிதைகள் அவளுடைய தனிமையில் எழுதப்பட்டவை; தனிமையின் மீது ஏகப்பட்ட புகார்கள் அவளுக்கு இருந்தன. ஏழு ஆண்டுகளாகத் தன்னைத் தானே வீட்டிற்குள் பூட்டிக்கொண்டு நீருக்குள் உறங்கும் மீனைப் போல் தனிமைக்குள் துழாவிக்கொண்டிருந்தவள். தனித்துவமான சிந்தனைத் தெறிப்புகளென்று தோன்றும்படி, மீச்சிறு தருணங்களைப் பதிவு செய்திருக்கிறாள். அவளுடைய கற்பனையும் அக்கறையும் பிரமாண்டமானது. தீவிரத்தன்மையை மிக மென்மையாக வெளிப்படுத்தித் தனக்குள்ளாகவே ஒரு கவிதைமொழியை வளர்த்துக்கொண்டு அதன் பக்கங்களைப் புரட்டியவள்.

எமிலி டிக்கின்சன்

பெரும்பாலும் எமிலியின் கவிதைகள் மரணம், வாழ்வு, காதல், இயற்கை, அழியாமை, ஆன்மா போன்றவற்றை விசாரிக்கின்றன. மரணம், கல்லறைகளைச் சிந்திக்கத்தொடங்கினாள். அதனால், அவளது படைப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மரணத்துடன் தொடர்புடையவை.

கடவுளைப் பற்றியும் அழியாத்தன்மையைப் பற்றியும் நினைத்துக்கொண்டே இருந்ததால், மரணம் தொடர்பிலான சிந்தனைகள் அவளுக்குப் பெரும் பிரச்னையாக இருந்திருக்க வேண்டும். அவளைச் சுற்றிலும் நடக்கும் மரணங்களைப் பார்த்தாள். ஒருமுறை கறுருப்பினச் சிறுவனின் இறுதி ஊர்வலத்தைப் பார்த்து மனமுடைந்தாள். 

உறவுப்பெண்ணான சோபியா ஹாலண்ட் தனது 15-ம் வயதில் மரணப்படுக்கையில் இருந்தபோது எமிலிதான் அவளை கவனித்துக்கொண்டார். அவள் இறப்பை அருகிலிருந்து பார்த்தவள், இறுதியாக அவள் இறந்தபோது அதீத மனஉளைச்சலுக்குள்ளானாள். ‘இரண்டு ஆண்டுகளுக்கு அவளைப் பார்த்துக் கொள்ளவோ அல்லது அவள் முகத்தைப் பார்க்கவோ மறுக்கப்பட்டிருந்தால் நானும் அந்நேரத்தில் இறந்திருப்பேன்’ எனச் சொல்கிறாள். ஒரு கடிதத்தில், பக்கத்து வீட்டுக்காரரின் மரணம் குறித்து, ‘ஓர் இளம்பெண் நம்பிக்கையுடன் இருந்தாள், ஆனால் எங்கள் தோட்டத்து மூலையில் இறந்து போனாள்’ என அவளுக்காக வருந்துகிறாள். மரணத்தின் ஒவ்வொரு தருணமும் அவளுக்கு அச்சத்தைக் கொடுத்தன.

எமிலி இளம் வயதிலேயே மனச்சோர்வடைந்ததால், குடும்பத்தினர் அவளைப் பாஸ்டனில் சிகிச்சைக்காக அனுப்பினார்கள். ‘என் துக்கத்திற்கான காரணத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை, மரணம் என் மனதைத் தின்று கொண்டிருந்ததால் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. பாஸ்டனுக்குச் சென்று ஒரு மாதம் தங்கினேன், என் உடல்நிலை மேம்பட்டதால் என் மனநிலை நன்றாக ஆனது.’ என்கிறாள். ‘ஒவ்வொருமுறையும் துக்கத்தைக் கடந்து வந்திருக்கிறேன், அது எனக்குப் பழகிப்போனது. ஆனால் அந்த நெருக்கடியான காலத்தைக் கடந்து வருவது என்பது சிறு கல்லில் தடுக்கிவிழுவது போலிருக்கிறது. சிறு கல் கூட என்னைப் பார்த்துச் சிரிக்கிறது அவ்வளவுதான்!’ என்று சொல்லும்போது அவள் கடந்த அனுபவங்களும், முகங்களும் நமக்கு உரைக்கின்றன. 

தனிமை

இருப்பதற்கான வேட்கையே மரணம் பற்றிய பயமாகச் சித்தரிக்கப்படுகிறது. மரணத்திற்குப் பல சாயல்கள், பல பரிமாணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மரணத்தைப் பார்த்தால் அதையே மனம் நினைத்துக்கொண்டிருக்கிறது. நான் பெரும்பாலும் துக்கங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதுண்டு, அப்படியே போனாலும் இறந்தவரின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்திருக்கிறேன். அந்த முகம் இரவு முழுவதும் முன்னால் வந்து கொண்டேயிருக்கும். திடீரென அவர் எழுப்புவதுபோல் உணர்ந்திருக்கிறேன். எமிலி சொல்வதுபோல் நானும் அழகானவற்றையே யோசிக்க முயற்சி செய்கிறேன்.

எப்படியும் வந்தே தீரும் மரணம் என்று அது ஒரு செயலாக மாறியவுடன் மறந்து, மரணத்தை நேர்மையாகவும் பொருண்மையாகவும், அவள் ஏற்றுக்கொள்வதைப் போல் நாமும் அது வரும்போது ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். எமிலியின் கோட்பாட்டின்படி மரணம் ஒரு புனிதமான இடத்தில் உள்ளது. மரணத்தில் வாழ்க்கையின் உச்சகட்டம் நிகழ்கிறது. மரணம் தவிர்க்கமுடியாதது என்பதை எமிலி உணர்கிறாள். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைக்க முடியாதது என்கிறாள். ஒருவருக்கு மரணம் வரும்போது அதைச்சார்ந்த உணர்வுகளைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவது யதார்த்தமென்றாலும் எப்படி இறக்கப்போகிறோமென்பது என்ற எண்ணம் கொடுமையாக இருக்கிறது.

‘நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது’ என்ற கவிதையில், காதலனைப் பிரிந்த வேதனையை விட நரக வேதனையைத் தாங்குவேன் என்று காதலி சொல்கிறாள். இப்போது அவனுடன் வாழ முடியாதென்று அவளுக்குத் தெரியும். ஆனால் அவள் மரணத்திற்குப் பிறகு அவனைச் சந்திக்க முடியும், என இறப்பிற்குப் பின் மீண்டும் காதலர்கள் இணைவதற்கான சாத்தியங்கள் அவளது பல கவிதைகளில் மீண்டும் மீண்டும் வருகின்றன. அழியாமையும் சொர்க்கமும் அவளுக்கு நெருக்கமானது. அதுமட்டுமின்றி அவளுடைய வேதனைகளை மறைக்க, இங்குள்ள வாழ்க்கையின் தீமைகளிடமிருந்து தப்பிக்கும் வழியாகவும் கனவாகவும் அவை இருந்துள்ளன. 

காதலித்த அனுபவமிருந்தாலும் காதலைக் கற்பனையாகவே பார்க்கிறாள். உடல்ரீதியான தாபம் பெரிதாக அவள் கவிதைகளில் வெளிப்படுத்தப்படவில்லை. காதலுணர்வு எல்லோருக்கும் சமமானது; உடல் ரீதியான ஈடுபாடுகள், அவளுடைய ஆன்மீக அனுபவங்களையும், அதுதொடர்பான தேடல்களையும் திருப்திப்படுத்த இயலாதெனவும் சொல்கிறாள்.

காதலை, ஆசை, ஏக்கங்களுடன் கையாள்கிறாள். இறப்பிற்கும் இல்லாமைக்கும் இடையிலான வாழ்வியல் போராட்டம் குறித்தும் அவளது கவிதைகள் பேசுகின்றன.

‘I miss my biggest Heart’ காதல் மீதான நம்பிக்கையை, ஆத்மார்த்தமான காதலின் உன்னதத்தை நமக்குக் காண்பிக்கிறது. மொழியின் ஊடாக அற்புத உணர்வுகளை நொய்மைத் தன்மையின்றி சாதித்தவள் எமிலி. பிறருடனும், வெளியுலகுடனான தொடர்பை கசப்புடன் பார்த்துத் தவிர்த்திருக்கிறாள். 

 எமிலியின் இயற்கை பற்றிய கவிதைகளில் இயற்கை பிரமாண்டமாகிறது. எவ்வளவு செயற்கையாக உருவாக்க நினைத்தாலும் இயற்கையின் முன் தான் விழுந்து வணங்குகிறோம். இயற்கையை அனுபவிப்பது, ரசிப்பது இயற்கைதான் என்றாலும் அதில் எமிலி மயங்கித் திளைக்கிறாள். பாறைகள், மலைகள், பறவைகள், தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், மின்னல்கள், எரிமலைகள் என இயற்கையில் அவள் பார்க்கும் நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறிய பொருட்களைப் பற்றி எழுதுகிறாள். அவளுக்கு இயற்கையே சொர்க்கம்.

அவள் இயற்கையோடு இயைந்த வாழ்வை புதிய கண்ணோட்டத்தில் துல்லியமாகப் பார்க்கிறாள். வால்ட் விட்மேன், வேர்ட்ஸ்வொர்த், எமர்சன் ஆகியோரைப் போல் தத்துவார்த்தமான பார்வையில் அவள் இயற்கையோடு ஊடாடவில்லை. இயற்கையின் மீதான அவளது பார்வையும் அனுபவமும் தனிப்பட்டது. சில நேரங்களில் அவள் இயற்கையில் உள்ள சில பொருள்களை, மனித உறவுச் சூழ்நிலைகளுடன் அடையாளப்படுத்தி அவற்றை நண்பர்களைப்போல் நினைத்து உரையாடுகிறாள்.

வெற்றி தோல்வி குறித்து உளவியல் ரீதியாகப் பார்க்கும் கவிதைதான் முதன் முதலில் நான் படித்த எமிலியின் கவிதை.

தோற்கடிக்கப்பட்டவன்

இறந்துகொண்டிருக்கிறான்

அவன் காதுகளை அடைத்துக்கொண்டு.

தொலைதூர வெற்றி முழக்கங்களால்

வெடித்துபோய் வேதனையோடும்

தெளிவோடும் செல்கிறான்.

எந்தப் போட்டியிலும் வெற்றி பெற்றவர்களையே உலகம் கொண்டாடும்போது அந்த இடத்தை விட்டு வலியோடும் வேதனையோடும் அமைதியாய்த் தோல்வியடைந்தவன் விடைபெற்றுச் செல்கிறான். அவனுக்கு மட்டுமே வெற்றியின் அருமையும் தாகமும் தெரியும். தோல்வியோடு செல்பவனின் வலிகளை உளவியல் ரீதியாக அணுகிய சிறிய கவிதைதான் என்றாலும் உணர்வுச்செறிவு மிகுந்து ஆற்றாமையின் திரட்சியாக எழுதப் பெற்ற வரிகள்.

‘ஏனெனில் நான் மரணத்திற்காக நிற்க முடியவில்லை’, ‘நான் யாருமில்லை! நீங்கள் யார்?’, ‘நம்பிக்கை’ என்பது இறகுகளுடன் இருக்குமொரு பொருள்’‘, `நான் இறக்கும்போது ஓர் ஈ ரீங்கரிப்பதைக் கேட்டேன்’ போன்ற பல்வேறு கவிதைகள் பிரபலமானவை. கிட்டத்தட்ட 1800-க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியிருந்தாலும், அவள் வாழ்ந்தபோது பத்துக்கும் குறைவான கவிதைகளே வெளியீடு கண்டன.   இறந்தபின்னரே அவளது படைப்புகள் புகழ்பெற்றன இன்று அமெரிக்க இலக்கியத்தைத் தூக்கிப் பிடிக்கும் முக்கிய சக்தியாகக் கருதப்படுகிறாள். தமிழிலும் ஏராளமான கவிதைகள் மொழிபெயர்ப்பாகியிருக்கின்றன. தனது கவிதைகளில் எமிலியின் பாதிப்பு உண்டென கவிஞர் பெருந்தேவி ஒரு முறை சொன்னதாக நினைவு.

பறவைகளின் அலகுகளைச் சொற்களால் உரசியவள். எமிலியின் பறவைகள் குறித்த கவிதைகள் மிகவும் தனித்துவமானது. பிரபலமான கவிதை, ‘நம்பிக்கை என்பது இறகுகளுடன் இருக்குமொரு பொருள்’ அவர் நம்பிக்கையை ஒரு சிறிய பறவைக்கு உவமையாக்கி, எவ்வளவு வலிமையானதாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறாள்.

பறவைகள்

நம்பிக்கை என்பது ஆனந்தமாகப் பாடும் ஓர் அற்புதப் பறவை,

கடுமையான புயலிலும் தன் குரலை இழக்காது

எவரிடமும் எதுவும் கேட்காத எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலையும், இடையூறுகளால் பாதிக்கப்படாத உறுதியையும் சொல்கிறது.  வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளில் நம்பிக்கை எப்போதும் இருக்கிறது, எதையும் சார்ந்திருப்பதில்லை. பறவைகள் தன்னியல்பில்  பாடுகின்றன.

வீட்டுத் தோட்டத்துக்கு வந்த ஒரு பறவை, நான் பார்ப்பது தெரியாமல் ஒரு பூச்சியைப் பிளந்து விழுங்குகிறது, புல்லில் அமர்ந்து பனித்துளியை விழுங்குகிறது. சுற்றும்முற்றும் திரும்பிப் பார்த்து தலையைச் சிலுப்புகிறது. ரொட்டித்துண்டுகளைப் போடுகிறேன், தன் சிறகுகளை அடித்து மெல்ல விரித்து இலகுவாக வானில் பறந்து செல்கிறது எனப் பறவையின் இயற்கையான நடவடிக்கைகள், கூரிய எச்சரிக்கை உணர்வு மற்றும் அதன் அற்புதமான பறத்தல் தன்மையைப் பற்றிப் பேசுகிறது. உயிர்களின் அன்றாட வாழ்வியல் முறையையும், மனிதர்களிடமிருந்து பறவைகளின் வேறுபட்ட பார்வைகளையும் சொல்கிறது.

எமிலி, உலகம் முழுவதும் விமர்சகர்களிடமும் எழுத்தாளர்களிடமும் பெரும் பாராட்டுகளைப் பெற்றாள். பல இலக்கிய விமர்சகர்கள் மற்றும் கவிஞர்கள் அவளது படைப்புகள் பற்றிய தங்களது கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர். எமிலியின் கவிதைகளை முழுமையாகத் தொகுத்து வெளியிட்டவர் தாமஸ் ஹெச். ஜான்சன். அவர் டிக்கின்சனின் கவிதைகளை அமெரிக்க இலக்கியத்தை மாற்றியத்த தனித்துவமான குரல் எனப் புகழ்ந்தார். அவருடைய மொழி நடை மற்றும் கவிதை வடிவம் அவரது காலத்துக்குப் புதிய நடையாக இருந்தது எனக் கூறினார்.

ஒரு பறவை, நடைபாதையில் இறங்கியது என்ற மிகவும் பிரபலமான கவிதையின் பாதிப்பில், எமிலியின் பறவை இறங்கி என்னுடைய ஒரு கவிதையிலும் நடந்து வருகிறது, எமிலி என் தூக்கத்தைக் கலைக்கிறாள் என்ற கவிதைகளை எழுதியிருக்கிறேன்.

எமிலி டிக்கின்சன்

1830 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் அமெரிக்காவின் ஆம்ஹெர்ஸ்ட் என்ற சிறிய நகரத்தில் பிறந்தவர். இந்நகரம் கனெக்டிகட் நதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அவரது தந்தை எட்வர்ட் டிக்கின்சன், வழக்கறிஞர் மற்றும் அறங்காவலராக இருந்தார். ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியின் பொருளாளராக இருந்தார். அவர் தன் குழந்தைகளைக் கிறிஸ்தவ மதநம்பிக்கைகளைப் பின்பற்றும்படி வளர்த்தார். 

 எமிலியின் பெரும்பாலான கல்வி அவரது வீட்டிற்குள்ளேயே நிகழ்ந்தது. 1847 இல் அவர் தெற்கு ஹாட்லியில் உள்ள மவுண்ட் ஹோலியோ கருத்தரங்கில் கலந்துகொண்டபோது சுறுசுறுப்பாகவும் நகைச்சுவையோடும்  குறும்புத்தனமாகவும் இருந்தாள். மவுண்ட் ஹோலியோக்கில் ஹெலன் ஃபிஸ்கே, பின் ஹெலன் ஹன்ட் ஜாக்சனையும் சந்திக்கிறாள். அவள் எமிலியின் தோழியானாள். பெஞ்சமின் எஃப் கவிதையிலும் வாசிப்பிலும் அவளுக்கு உறுதுணையாக இருந்தான். எமர்சனின் கவிதைகளின் பிரதியை அவளிடம் கொடுத்தான். அவனது மரணம் அவளை உலுக்கியது. ஒரு வருடத்தில் அவள் தன் தந்தையுடன் வாஷிங்டனுக்குச் செல்கிறாள், பிலடெல்பியாவுக்குச் சென்றபோது, திருமணமான மதகுருவான சார்லஸ் வேர்ட்ஸ்வொர்த்தைச் சந்திக்கிறாள். பிறகு அவரைக் காதலித்தாள்.

எமிலியின் தந்தை 1874 ஆம் ஆண்டு இறந்தார். மன உளைச்சலில் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்ள். தந்தையின் இறுதிச் சடங்கில் கூடப் பங்கேற்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.  ஒரு வருடம் கழித்து தாயார் முடங்கிப் போனார். அவர் அதற்குப் பின்னர் மிகவும் அரிதாகவே வெளியில் வந்தார். படுக்கையில் இருந்த அவர் தாயாரை எமிலியின் அண்ணியான சூ. கில்பர்ட் பராமரித்தார். எமிலியின் நெருங்கிய தோழியாகவும் அவர் ஆகிறார். எமிலியின் இளம்வயதில் பல காதல் விவகாரங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவை எதுவும் தீவிரமாக இல்லை.

இருபதுகளின் ஆரம்பத்திலேயே தனிமையை விரும்பும் பெண் என்ற எண்ணத்தை சுற்றாரிடம் எமிலி ஏற்படுத்திவிட்டார். வெளிப்புற நிகழ்வுகள் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியது. அவரது இருபதுகளில்தான் ஹாவ்தோர்ன் “ஸ்கார்லெட் லெட்டர்” மற்றும் “தி ஹவுஸ் ஆஃப் தி செவன் கேபிள்ஸ்” போன்ற படைப்புகளை வெளியிட்டார்.  மெல்வில்வின் “மோபி டிக்” வெளிவந்தது.  

எமிலி டிக்கின்சன் 1920 முதல் அமெரிக்காவின் முக்கியக் கவிஞர்களில் ஒருவராக நிலைபெறத் தொடங்கினார். 1955 ஆம் ஆண்டில், எச். ஜான்சன் ‘எமிலி டிக்கின்சனின் கவிதைகள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்தத் தொகுதிகளில் அவரது 1775 கவிதைகள் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டது.

நான் இறக்கும்போது ஓர் ஈ ரீங்கரிப்பதைக் கேட்டேன்

அறை அமைதியாய் இருந்தது

காற்றில் நிலவும் அமைதியைப் போல

புயலுக்குப் பிந்திய அமைதியைப் போல.

இது மரணத்தின் இறுதி தருணங்களைப் பற்றிய ஆழ்ந்த கவிதை, இறப்பிற்குப் பின் இருக்கும் சின்னஞ்சிறு தருணத்தைத் கவனிக்கச் செய்கிறது. வாழ்க்கை மாயைப் போல் அற்புதமாக இருக்கிறது, அனைத்தும் அதை உடைக்கவே சதி செய்கின்றன.’ என்கிறாள்.

எமிலி தன் கவிதைகளில் வெளிப்படுத்தியதைவிட அதிகமான உணர்வுகளைக் கடிதங்களாக எழுதியிருக்கிறார். ஆனால் அவற்றை அனுப்பவேண்டியவருக்கு அனுப்பாமல் பத்திரமாக வைத்துக்கொண்டார். சகோதரி சுசனுக்கு முன்னூறுக்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதினாலும் தானே வைத்துக்கொண்டார்.  அடுத்த வீட்டில் இருக்கும் சுசனுக்கு, ‘சனிக்கிழமை மாலை வழக்கம் போல் வீட்டிற்கு வந்து என்னை அணைத்து ஒரு முத்தமிட்டுச் செல்’, என்றும் எழுதியிருக்கிறாள். 

“நான் குழந்தையாக இருந்தபோது அடிக்கடி என் வீட்டிற்குள் என் அண்ணன் ஆஸ்டினைத் தேடி ஓடி விடுவேன். அவன் எனக்கு ஒரு தாயாகத் திகழ்ந்தான். ஆனாலும், வேறு யாரையும்விட எனக்கு அவனைப்பிடிக்கும்.” என்று கடிதத்தில் எழுதியிருந்தார். சுசன்-ஆஸ்டின் திருமண வாழ்வு சரியாக அமையவில்லையென வருந்தியவர். தனது இறப்பிற்குப்பின் இக்கடிதங்களை அழித்துவிடுமாறு சூசனிடம் சொன்னவர். எமிலியின் கடிதங்களைத் தேடியபோதுதான் அவரது கவிதைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தமிழ்க் கவிதைகளில் எமிலியின் பெயர் நிறைய வந்திருக்கிறது.  எமிலிக்காக ஒரு கூட்டத்தைச் சமீபத்தில் நடத்தியதாக மதார் சொல்லியிருந்தார். தமிழின் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களில் ஒருவரான ந.ஜயபாஸ்கரன், எமிலியின் வாழ்க்கையாலும் கவிதைகளாலும் சிறுவயதிலிருந்தே ஈர்க்கப்பட்டவர். நகுலனின் படைப்புகளில் வரும் சுசீலா போலவே, ந.ஜயபாஸ்கரனின் கவிதைத் துணைவியாக எமிலி இருக்கிறார். ஆம்ஹெஸ்டில் எமிலியின் நினைவிடத்திற்கும் சென்றுவந்திருக்கிறார். அனுராதா ஆனந்த் எமிலியின் தேர்ந்தெடுத்த கவிதைகளை மொழிபெயர்த்து நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

 க. மோகனரங்கன் மொழிப்பெயர்த்த எமிலியின் ஒரு கவிதை:.

 கடவுள் மெய்யாகவே பொறாமைபிடித்தவர் ,

அவரோடில்லாமல் நாம்

ஒருவரோடொருவர் விளையாடிக் கொள்வதை

காணப் பொறுக்காது அவருக்கு.

காலமயக்கத்தை ஏற்படுத்தி நுண்ணியத் தருணங்களை அவதானித்த எமிலி நுட்பமான மனநிலையுடன், சீரிய மொழி நுட்பத்துடன் எளிமையையும், இயல்பையும் கவிதைகளில் நேர்த்தியாகத் தரும் திறன் கைவரப்பெற்றிருந்தவர். எமிலி அமைதியானவர் என்றாலும் தொண்டைக்குள் சுருளும் பாதரசத்துடன் வசித்தவர்.  எல்லாத் தரப்பையும் கவர்ந்த எமிலி டிக்கின்சன் மௌனமாய் நம் நினைவு மேகத்திற்குள் நுழைந்து நிற்கிறாள். தாழ்வாரத்தில் மலர்ந்த பூவாக இருந்தாலும் நீண்டு வளர்ந்து நுனியில் கனிந்தவள் எமிலி.

 – சொற்கள் மிதக்கும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.