சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு விவகாரம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து 4 கடிதம்

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து 4 முறை கடிதம் அனுப்பியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை இந்தியா பொருட்படுத்தவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையில் சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதால் தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள பாகிஸ்தான் மிகுந்த ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளது. இந்நிலையில் சிந்து நதி விவகாரத்தில் இந்தியா தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோரி பாகிஸ்தான் இதுவரை 4 கடிதங்களை எழுதியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த கோரி மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துக்கு பாகிஸ்தான் நீர்வள அமைச்சக செயலாளர் சையது அலி முர்தாசா இதுவரை 4 கடிதங்களை அனுப்பியுள்ளார். இந்த கடிதங்கள் வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகும் பாகிஸ்தானிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.

தீவிரவாதமும் வர்த்தகமும் ஒரே நேரத்தில் நடைபெற முடியாது, ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்று இந்தியா தெளிவாகக் கூறியுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்புறவில் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த உணர்வுகளுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட்டு வந்தது.

எனவே எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கான ஆதரவை நிறுத்துவதுடன் தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான மற்றும் நம்பத்தகுந்த நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்கும் வரை சிந்து நீதி ஒப்ந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து அப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணுமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபிடம் அந்நாட்டு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக பாகிஸ்தான் எம்.பி. சையலி அலி ஜாபர் கடந்த மாதம் கூறுகையில், “இப்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் நெருக்கடிக்கு தீர்வு காணாவிட்டால் நாம் பட்டினியால் சாக நேரிடும். சிந்து நதி படுகை நமது உயிர்நாடியாக உள்ளது. ஏனெனில் நமது தண்ணீரில் நான்கில் மூன்று பங்கு நாட்டுக்கு வெளியில் இருந்து வருகிறது. 10-ல் 9 பேர் தங்கள் வாழ்க்கைக்கு சிந்து நதி படுகையை நம்பியுள்ளனர். நமது பயிர்களில் 90 சதவீதம் இந்த தண்ணீரை நம்பியுள்ளன. மேலும் அனைத்து மின் திட்டங்களும் அணைகளும் சிந்து நதி மீது கட்டப்பட்டுள்ளன” என்றார்.

பாகிஸ்தான் தலைவர்களின் இந்த வற்புறுத்தலை தொடர்ந்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.