“திமுகவை தோற்கடிக்க தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்” – மதுரையில் அமித் ஷா பேச்சு

மதுரை: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என்று கூறுகிறார். அவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னால் தோற்கடிக்க முடியாமல் இருக்கலாம், ஆனால் தமிழக மக்கள் திமுகவை தோற்கடிக்க காத்திருக்கிறார்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

மதுரை ஒத்தக்கடையில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று (ஜூன் 8) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: “தமிழகத்துக்கு வந்து தமிழ் மொழியில் பேசமுடியவில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன். 3,000 ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட பழமை வாய்ந்த நகரம் மதுரை. வரும் ஜூன் 22ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தி தர வேண்டும், என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

மதுரை பலவிதமான மாற்றங்களுக்கு வித்திடும் மண். அந்தவகையில், இன்று நடந்துள்ள இந்த ஆலோசனைக் கூட்டமும், திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து வீட்டுக்கு அனுப்பும் மாற்றத்தைக் கொண்டு வரும். 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும். நான் நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், என்னுடைய செவியும் சிந்தையும் தமிழகத்தின் மீதுதான் இருக்கிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமித் ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என்று கூறுகிறார். அவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னால் தோற்கடிக்க முடியாமல் இருக்கலாம், ஆனால் தமிழக மக்கள் திமுகவை தோற்கடிக்க காத்திருக்கிறார்கள். என்னுடைய நீண்டகால அரசியல் அனுபவத்தில் கூறுகிறேன், தமிழக மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து கூறுகிறேன், வரும் சட்டமன்றத் தேர்தலில், தமிழக மக்கள் திமுகவை தூக்கியெறிய காத்திருக்கிறார்கள்.

நம் நாட்டின் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு தமிழகத்தில் இருந்து நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் மிகப்பெரிய எழுச்சியும், ஆதரவும் எழுந்ததை நான் நினைவுகூற விரும்புகிறேன். பஹல்காமில் அப்பாவி மக்களை, மதத்தின் பெயரால் சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளை, முப்படைகளைத் திரட்டி, பிரதமர் மோடி அவர்களுடைய நாட்டுக்குள் சென்றே தாக்குதல் நடத்தினார். அதுதான் அவர்களுக்கு நாம் புகட்டிய பாடம்.

இதற்கு முன்பும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தங்களது கைவரிசையைக் காட்டியிருந்தார்கள். ஆனால், இதுபோன்ற தாக்குதல்களை நாட்டை ஆண்ட முந்தைய அரசு நடத்தியது இல்லை. ஆனால், புரி, புல்வாமா மற்றும் தற்போது நடந்துள்ள ஆபரேஷன் சிந்தூர் வரை முப்படைகளும் சேர்ந்து நமது தேசத்தின் வீரதீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானுக்குள் நூறு கி.மீட்டர் பறந்து, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களைத் துல்லியமாக தாக்குதல் நடத்தி, அவர்களுடைய இருப்பிடங்களை மண்ணோடு மண்ணாக்கியது இந்திய ராணுவம்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து திட்டங்களும் எப்படி சிறப்பாக செயல்படுத்தப்படுகிறதோ, அதேபோல் தான் ராணுவமும் தன்னிறைவான நிலையைப் பெற்றுள்ளது. அதனால் தான் இந்திய ராணுவம் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாம் அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியாவின் வான்வெளி சாதனைகள் குறித்து சொல்ல வேண்டியிருக்கிறது. நாட்டின் இளைஞர்கள் காவிரி இன்ஜின் என்ற சொல்லை இப்போது கூறத் தொடங்கி உள்ளனர்.

பாகிஸ்தான் தன்னுடைய ட்ரோன்களையும், ஏவுகனைகளையும் நம் நாட்டின் மீது ஏவத் தொடங்கிய போது, இந்தியாவின் வான்வெளி வல்லமை உலக நாடுகளுக்கு எல்லாம் பறைசாற்றும் வகையில், பாகிஸ்தான் அனுப்பிய அனைத்தையும் அடித்து தூள் தூளாக்கியது இந்திய ராணுவம். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று நம் பிரதமர் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் வாலாட்டினால், அவர்களுடைய இருப்பிடங்களுக்கேச் சென்று தாக்குதல் நடத்தப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் மிக முக்கியமான ஒரு தேர்தல். ஏற்கெனவே 2024 மக்களவைத் தேர்தல் நமக்கு முக்கியமானதாக இருந்தது. அப்போதுதான், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்நாட்டின் பிரதமராக பதவியேற்றார். 2024-ல் தான் ஒடிசாவில், முழு மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைந்தது. ஹரியானாவிலும் மூன்றாவது முறையாக மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அதேபோல், மகராஷ்டிராவிலும் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வெற்றியை பாஜக பதிவு செய்தது.

2025-ல், 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டது. 2025-ல் டெல்லியில் எப்படி ஆட்சி அமைக்கப்பட்டதோ, அதேபோல் 2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையப் போகிறது. 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில், தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜகவின் கூட்டணி ஆட்சி அமையும் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சி ஊழலில் திளைத்திருக்கிறது. பிரதமர் மோடி ஏழை மக்களுக்காக கொடுக்கும் பணத்தை, திமுக அரசு மக்களின் நலனுக்காக செலவிடுவது இல்லை. அந்த தொகையை மடைமாற்றம் செய்து, ஏழையெளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை கிடைக்காமல் செய்து வருகின்றனர். திமுக ஆட்சியில் விலைவாசி ஏற்றம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஏழையெளிய மக்கள், மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

திமக ஆட்சியில் ஊழல் மலிந்து காணப்படுகிறது. டாஸ்மாக்கில் ரூ. 35 ஆயிரத்து 775 கோடி ஊழல் செய்து, தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு நூற்றுக்கு நூறு சதவீதம் தோல்வியடைந்த அரசு. திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக்கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். முதல்வர் ஸ்டாலின் அவர்களே, உங்கள் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து வாருங்கள். அதைப் பார்த்துவிட்டு கூறுங்கள், அதில் எத்தனை சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்கள் என்று.

திமுக ஆட்சியில் ஊழல் மட்டுமின்றி, கள்ளச் சாராயத்தால் தமிழகத்தில் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். தென் தமிழகத்தில் நிகழும் சாதிப் பிரச்சினை, பிரிவினைவாத சம்பவங்களில் அரசியல் லாபத்தைக் கருத்தில்கொண்டு திமுக அரசு செயல்படுகிறது. இந்த ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லாமல், துன்பத்தில் இருக்கும் சூழல்தான் நிலவி வருகிறது. தமிழக முதல்வருக்கு இதுகுறித்து எந்தவொரு அக்கறையும் கவலையும் இல்லை.

திருப்பரங்குன்றம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான அந்த மலையை ‘சிக்கந்தர் மலை’ என்று சொல்லக்கூடிய துணிச்சல் இந்த திமுக அரசுக்கு வந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக முருக பக்தர்களின் வழிப்பாட்டுத் தலத்தை, அரசியல் லாபத்துக்காக பிரிவினைவாத நோக்கத்துடன் அவ்வாறு திமுக பேசிவருகிறது. எனவே, வரும் ஜூன் 22ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில், நீங்கள் ஒவ்வொருவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு நம்முடைய வலிமையையும், ஒற்றுமையையும் காட்ட வேண்டும், என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஒவ்வொருமுறை தமிழகம் வரும்போது தமிழக அரசுக்கு நினைவூட்டி வருகிறேன். தமிழகத்தில் தமிழ் தமிழென்று பேசும் நீங்கள், உயர் கல்விக்கான பாடத்திட்டங்களை ஏன் தமிழில் மாற்ற மறுக்கிறீர்கள்? மருத்துவம் மற்றும் பொறியியல் பாடத்திட்டங்களை உடனடியாக தமிழில் மாற்ற வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் மரபு சின்னமான, மன்னர்கள் கையாண்ட செங்கோலை, நாட்டின் உயரிய இடமான நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்துக்கு கொண்டு சென்றவர் பிரதமர் மோடி. அப்படி தமிழ் மரபை உயர்த்திப் பிடித்த பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி கூறினாரா?

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. பத்தாண்டுகால பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா 4.19 ட்ரில்லியன் வளர்ச்சியை கண்டுள்ளது. 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.1.53 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால், பாஜக அரசு அதே பத்தாண்டுகளில், தமிழகத்துக்கு வழங்கியது ரூ.6.80 லட்சம் கோடி. தமிழகத்தின் சாலைகள் மேம்பாட்டுக்காக 63 ஆயிரம் கோடி, ரயில்வே கட்டுமானப் பணிகளுக்காக 77 ஆயிரம் கோடி, விமான நிலைய மேம்பாட்டுக்காக 3,500 கோடியை மத்திய அரசு தமிழகத்துக்கு நேரடியாக வங்கியிருக்கிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சியை எப்போது அகற்றப்போகிறோம்? எப்படி அகற்றப்போகிறோம்? அதற்கு என்ன செய்யப் போகிறோம்? என்று இந்த கூட்டத்துக்கு வந்து செல்லும் கட்சியினர் ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வரும் 2026-ல் நடைபெறவுள்ள தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, பாஜக அதிமுகவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கவுள்ளது. நீங்கள் அனைவரும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றத் தயாராக இருக்கிறீர்களா? அந்த வெற்றிக்கான உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள்,” என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.