பெங்களூரு: கடந்த புதன்கிழமை அன்று பெங்களூருவில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றி கொண்டாட்ட விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த நிகழ்வுக்கு முன்கூட்டியே ஆள் பற்றாக்குறை, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறைபாடு போன்றவற்றை சுட்டிக்காட்டி காவல் துறை அதிகாரி ஒருவர் தரப்பில் கர்நாடக அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கடிதம் சம்பவம் நடந்த ஜூன் 4-ம் தேதி அன்று எழுதப்பட்டதாக தகவல். நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் ஜி. சத்தியவதி மற்றும் பிற உயர் அதிகாரிகளுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல். சட்டமன்ற பாதுகாப்பு பணியை கவனிக்கும் காவல் துறை துணை ஆணையர் எம்.என்.கரிபசவன கவுடா அனுப்பிய அந்த கடிதத்தில் ஆட் பற்றாக்குறை மற்றும் கிரவுட் மேனேஜ்மென்ட் குறித்து குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விதான சவுதாவில் லட்ச கணக்கான ரசிகர்கள் கூடுவார்கள். அப்படி கூடும் அந்த பெருங்கூட்டத்தை கட்டுப்படுத்துவது என்பது விதான சவுதா பாதுகாப்பு பிரிவில் நிலவும் ஆட் பற்றாக்குறை காரணமாக மிகவும் சவாலான காரியமாக இருக்கும். அதனால் அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் நுழைவு சீட்டுகளையும் ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பங்களை தலைமை செயலகத்துக்கு அழைத்து வரவும் கூடாது. மேலும், மதியம் தலைமை செயலகத்துக்கு விடுமுறை அறிவிக்கலாம். விதான சவுதா கட்டிடம் பாரம்பரிய சின்னம் என்பதால் சிசிடிவி கண்காணிப்பு சார்ந்த குறைபாடுகளும் நிலவுகின்றன. அதோடு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள மேடையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் எனவும் கவுடா கூறியுள்ளார்.
11 பேர் உயிரிழப்பு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி அணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்த வெற்றி விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 64 பேர் காயமடைந்தனர். கப்பன் பூங்கா போலீஸார் ஆர்சிபி அணிக்கு வெற்றி விழா ஏற்பாடு செய்த ஆர்சிபி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சியை நடத்திய டிஎன்ஏ நிறுவனம் ஆகியவற்றின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் ஆர்சிபி அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிக்கோல் சோசலே, டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் துணை தலைவர் சுனில் மேத்யூ, மார்க்கெட்டிங் நிர்வாகி கிரண், ஒருங்கிணைப்பு நிர்வாகி சுமந்த் ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெயராம் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்த கடிதம் பேசு பொருளாகி உள்ளது. அந்த கடிதத்தை அரசு தரப்பு கவனத்தில் எடுத்துக் கொண்டு இருந்தால் நிச்சயம் இந்த அசம்பாவிதத்தை தவிர்த்து இருக்கலாம்.