''மக்களவையில் தமிழக பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என உத்தரவாதம் தர தயாரா?'' – தயாநிதி மாறன்

சென்னை: “தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம். மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா?” என்று திமுக எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 84-ன் படி 2026க்கு பின் மேற்கொள்ளப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டாக வேண்டும். அதை மனதில் வைத்தே மக்கள் தொகை கணக்கெடுப்பைக் காலம் தாழ்த்தி வந்து தற்போது 2027-ல் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது மத்திய பாஜக அரசு.

மத்திய பாஜக அரசின் இந்த சதியை தமிழக முதல்வர் ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறார். நியாயமான தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என இதனால் பாதிக்கப்போகும் மாநிலங்களின் முதல்வர்கள், தலைவர்களை ஓரணியில் அணிதிரட்டி எதிர்ப்பைப் பதிவு செய்தார். அப்போதெல்லாம் தமிழக முதல்வர் வீண் பதற்றத்தை உண்டாக்குகிறார் எனக்கூறி வந்தவர்களின் குட்டு இப்போது மக்கள் முன் அம்பலப்பட்டு கிடக்கிறது. இதோ நம் வீட்டு வாசல் வரை வந்துவிட்டது அந்த ஆபத்து.

இப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொல்ல போகிறார். தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம். மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.