அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன்: சிகிச்சைக்கு உதவுமாறு முதல்-அமைச்சருக்கு பெற்றோர் கோரிக்கை

சார்ஜா,

சார்ஜாவில், அரிய வகை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் தமிழக சிறுவனுக்கு உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் செயலிழந்து வரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, அவரது மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ஜாவில் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த ஜகுபர் மற்றும் ஜாஸ்மின் தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஜகுபர் துபாய் அரசு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஜயான் சார்ஜாவில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் பள்ளிக்கூடத்தில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார்.

ஜயான் எந்தக் குழந்தையும் எதிர்கொள்ளக்கூடாத மிகப்பெரிய போராட்டத்தை தனது வாழ்வில் எதிர்கொண்டிருக்கிறார். டுசேன் மஸ்குலர் டிஸ்டிரோபி என்கிற மிகவும் கடுமையான தசைநார் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது உடல், நாளுக்கு நாள் சிதைந்து வருவதுடன், தற்போது நுரையீரல், இதயம் மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது.

“தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் கொடூர நோயின் தாக்குதல் கடுமையாகிக் கொண்டிருக்கிறது. ஜயான் தற்சமயம் பல்வேறு மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நோய்க்கான உயிர் காக்கும் சிகிச்சையாக ஜீன் தெரபி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கான செலவு சுமார் ரூ.25 கோடி ஆகும். இந்த சிகிச்சைக்கான பணத்தை எங்களால் செலவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் தன்னார்வ அமைப்பு உள்ளிட்ட கருணை உள்ளம் கொண்டவர்களிடம் இருந்து நிதியை திரட்ட முயற்சி செய்து வருகிறோம். இதன் காரணமாக இதுவரை 18 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது.

கடுமையான நோய் பாதிப்பு இருந்த போதும் தனது நிலைக்கு மாறாக, ஜயான் ஒரு மகிழ்ச்சியான மற்றும் அன்பான குழந்தையாகவே இருக்கிறார். முகத்தில் எப்போதும் சிரிப்பு இருந்து வருகிறது. அவர் தனது பள்ளி வாழ்க்கையை மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார். தனது தங்கை உடன் நேரத்தை அதிகமாக செலவிட விரும்புகிறார்.

ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நோய் ஏற்படுத்தும் பாதிப்பை கண்டு எங்கள் இதயம் நொறுங்கி வருகிறது. அடுத்து என்ன நடக்க போகிறதோ? என்ற அதிர்ச்சியிலிருக்கிறோம்” என அவரது பெற்றோர் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “தனது சிறப்பான பணிகள் மற்றும் உதவிகள் மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எண்ணற்ற உயிர்களை காப்பாற்றி வருகிறார். அதன் அடிப்படையில் எங்கள் மகனின் உயிரை காப்பாற்ற உதவுமாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுக்கிறோம். முதல்-அமைச்சரின் பேருதவியின் மூலம் ஜயானின் உயிரை காப்பாற்றி அவரின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைக்க முடியும் என நம்புகிறோம்.

மேலும் இந்த மருத்துவ சிகிச்சைக்கு உதவிட விரும்பும் அமைப்புகள், தனிநபர்களும் பங்களிப்பினை வழங்கி உதவிடலாம். இதன் மூலம் கொடிய நோயுடன் போராடி வரும் ஜயான் அதில் இருந்து விடுபட உதவியாக இருக்கும். இவ்வாறு தெரிவித்தனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.