பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றி கொண்டாட்ட நிகழ்வுக்கு கர்நாடக அரசே ஏற்பாடு செய்தது. இதில் எங்களை பலிகடாவாக ஆக்க முயற்சிப்பது அநீதியானது என கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி அணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்த வெற்றி விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 64 பேர் காயமடைந்தனர். கப்பன் பூங்கா போலீஸார் ஆர்சிபி அணிக்கு வெற்றி விழா ஏற்பாடு செய்த ஆர்சிபி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சியை நடத்திய டிஎன்ஏ நிறுவனம் ஆகியவற்றின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் ஆர்சிபி அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிக்கோல் சோசலே, டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் துணை தலைவர் சுனில் மேத்யூ, மார்க்கெட்டிங் நிர்வாகி கிரண், ஒருங்கிணைப்பு நிர்வாகி சுமந்த் ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெயராம் ஆகியோரை தேடி வருகின்றனர்.
அரசு, போலீஸும் பொறுப்புL இந்நிலையில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரகுராம் பட் நேற்று முன் தினம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த வழக்கில் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது உண்மைக்கு புறம்பானது. சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு வெற்றி விழா நடத்த வேண்டும் என கர்நாடக அரசுதான் முடிவெடுத்தது. அதற்கான ஏற்பாடுகளும் அரசு தரப்பில் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தற்கும், அதில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளுக்கும் எங்களை காரணமாக சுட்டுவது அநீதியானது.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாக குழு, சின்னசாமி மைதானத்தை வாடகைக்கு விடுவதை மட்டுமே கையாள்கிறது. அங்கு வரும் பார்வையாளர்கள், அவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை அரசே கையாள்கிறது. அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்திருக்க வேண்டும். நுழைவுவாயில்களை கையாள்வது, கூட்டத்தை கட்டுப்படுத்துவது ஆகியவை எங்களுடைய சங்கத்தின் பொறுப்பு அல்ல. அதற்கு முற்றிலும் போலீஸாரே பொறுப்பு ஆகும்.
இந்த சூழலில் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, மூத்த நிர்வாகிகளை கைது செய்ய முயற்சிப்பது காவல்துறை மற்றும் அரசின் நீதிக்கு எதிரான செயலாகும். எங்களுக்கும் இந்த நெரிசல் மரணங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாததால் எங்களை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். எங்கள் நிர்வாகிகளை இவ்வழக்கில் கைது செய்வதையும் தடுக்க வேண்டும்”என கோரியுள்ளார். இந்த மனு ஓரிரு தினங்களில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நெரிசல் மரணங்கள் தொடர்பாக தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரித்தது. அப்போது இந்த நெரிசல் மரணங்கள் தொடர்பாக பதில் அளிக்குமாறு கர்நாடக அரசு, ஆர்சிபி அணி நிர்வாகம், கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த வழக்கு வரும் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் சங்கமும், ஆர்சிபி அணி நிர்வாகியும் இந்த நெரிசல் மரணத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.