கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் ஐசிஐசிஐ வங்கி கிளை உள்ளது. இங்கு வாடிக்கையாளர் தொடர்பு மேலாளராக பணியாற்றியவர் சாக் ஷி குப்தா. இவர் குறைந்த கால கட்டத்தில் அதிக பணத்தை சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளார். அதற்காக வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த வைப்பு நிதியை சிறிது சிறிதாக எடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார். ஆனால், பங்குச் சந்தையில் சாக் ஷிக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதனால், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் அந்தப் பணத்தை மீண்டும் செலுத்த முடியவில்லை.
எனினும், பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக பணத்தை சம்பாதிக்க, கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையில் 41 வாடிக்கையாளர்களின் வங்கி வைப்பு நிதியில் இருந்து ரூ.4.58 கோடியை எடுத்துள்ளார். இந்நிலையில், ஒரு வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வந்து தனது வைப்பு நிதி பற்றி விசாரித்துள்ளார். அப்போதுதான் வைப்பு நிதியில் மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 18ம்- தேதி வங்கி மேலதிகாரிகள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சாக் ஷி குப்தாவின் கைவரிசை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்றுமுன்தினம் இரவு தனது சகோதரியின் திருமணத்தில் பங்கேற்றிருந்த சாக் ஷியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து விசாரணை அதிகாரி இப்ராகிம் கான் கூறியதாவது: வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள வைப்பு நிதியின் இணையதள லிங்க்கை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி ரூ.4.58 கோடியை சாக் ஷி எடுத்துள்ளார். அந்த பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக வங்கி வாடிக்கையாளர்களின் மொபைல் போன் எண்களையும் கணக்குகளில் மாற்றி உள்ளார்.
போன் எண்கள் மாற்றம்: அவற்றுக்குப் பதில் தனது குடும்பத்தாரின் மொபைல் எண்களை பதிவு செய்துள்ளார். அதனால், வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் தகவலோ அல்லது ஓடிபி.யோ வாடிக்கையாளர்களின் மொபைல் போனுக்கு செல்லவில்லை. எனவே, வைப்பு நிதியில் இருந்து சாக் ஷி தைரியமாக அடிக்கடி பணம் எடுத்து வந்துள்ளார். இவ்வாறு விசாரணை அதிகாரி இப்ராகிம் கான் கூறினார்.