`10 பேருடன் திருமணம், 4 நிச்சயதார்த்தம்' – மேட்ரிமோனி மூலம் மோசடி செய்த பெண்.. சிக்கியது எப்படி?

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காஞ்ஞிரமற்றம் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா சந்திரசேகரன் (35). இவர் திருமண வரன் பார்ப்பதாக மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவுசெய்திருந்தார். மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆரியநாடு ஊராட்சி மன்ற உறுப்பினராக உள்ள ஒரு இளைஞர் கடந்த மாதம் அழைத்திருந்தார்.

எதிர் முனையில் பேசிய பெண் ரேஷ்மா-வின் அம்மா எனக்கூறி பேசியதுடன், ரேஷ்மா-வின் மொபைல் எண்ணை கொடுப்பதாகக்கூறி மற்றொரு மொபைல் எண்ணை கொடுத்துள்ளார். அந்த எண்ணில் தொடர்புகொண்டு ரேஷ்மாவிடம் பேசினார் ஊராட்சி மன்ற உறுப்பினரான இளைஞர். பின்னர் கோட்டயத்தில் உள்ள ஒரு மாலில் வைத்து இருவரும் சந்தித்துக்கொண்டனர். அப்போது பேசிய ரேஷ்மா, சமஸ்கிருதத்தில் பிஎச்டி செய்துள்ளதாகவும். தனது தாய்க்கு தன்னை திருமணம் செய்துகொடுக்கும் எண்ணம் சிறிதும் இல்லை எனவும் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

10 பேரை திருமணம் செய்த ரேஷ்மா

அவரது சோகக் கதையைக் கேட்ட ஊராட்சிமன்ற உறுப்பினர், அவரை ஜூன் 6-ம் தேதி திருமணம் செய்துகொள்ளலாம் எனவும், அதற்கு முந்தைய தினம் ஆரியநாட்டுக்கு வரும்படியும் அழைத்துள்ளார்.

அந்த பெண்ணும் கூறியபடி கடந்த 5-ம் தேதி ஆரியநாட்டுக்கு வந்துவிட்டர். ரேஷ்மாவை திருமணம் செய்வதற்காக உறவினர்களுக்கு அழைப்பு கொடுத்ததுடன், திருமணமண்டபம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகள் திருமணத்துக்கு முந்தையதினம் வந்த ரேஷ்மா-வை தனது நண்பரான ஊராட்சிமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் தங்க வைத்துள்ளார்.

அந்த வீட்டில் தங்கியிருந்த ரேஷ்மா-வின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திருமணத்துக்காக 6-ம் தேதி மணப்பெண் அலங்காரத்துக்காக ரேஷ்மா பியூட்டி பார்லருக்குச் சென்றார். அப்போது வீட்டில் இருந்த அவரது பையை சோதித்து பார்த்தபோது 45 நாட்களுக்கு முன் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டதற்கான சில ஆவணங்கள் இருந்துள்ளன.

இதையடுத்து ஆரியநாடு காவல் நிலையத்தில் ஊராட்சிமன்ற உறுப்பினர் புகார் அளித்தார். பியூட்டிபார்லரில் இருந்து மேக்கப் போட்டுவிட்டு வந்த ரேஷ்மாவை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பலரை திருமணம் செய்துகொண்ட விபரம் தெரியவந்தது.

கைதுசெய்யப்பட்ட ரேஷ்மா

இதுபற்றி ஆரியநாடு போலீஸார் கூறுகையில், “ரேஷ்மா இரண்டு மொபைல் எண்கள் வைத்துள்ளார். அதில் ஒரு எண்ணை மேட்ரிமோனி-யில் பதிவு செய்துள்ளார். அந்த எண்ணுக்கு தொடர்புகொள்ளும் ஆண்களிடம் பெண்ணின் தாய் போன்று பேசி, இளைஞர்களின் பின்னணியை தெரிந்துகொள்வார். ஏமாற்றுவதற்கு ஏதுவான ஆள்தான் என்பதை உறுதி செய்துகொண்டு ரேஷ்மாவின் எண்ணை தருகிறேன் எனக்கூறி மற்றொரு எண்ணை கொடுப்பார்.

மற்றொரு எண்ணில் இளைஞர்களிடம் பேசுவதுடன், தனது வீட்டில் திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் எனது போன்ற கதைகளைக்கூறி தனி ஆளாகச் சென்று திருமணம் செய்துகொள்வார். திருமணத்தின்போது மணமகன் அணிவிக்கும் தாலிச்செயின் உள்ளிட்ட தங்க நகைகளுடன் மாயமாகிவிடுவார். இதுவரை அவர் 10 பேரை திருமணம் செய்துள்ளதாகவும், இன்னும் 4 பேருடன் திருமண நிச்சயம் செய்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு ஆண்டுக்கு யாரை எல்லாம் திருமணம் செய்யப்போகிறோம் என்ற லிஸ்ட் வைத்து செயல்பட்டுள்ளார். அதில் அடுத்த மாதம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளது தெரியவந்தது. அடுத்த மாதம் திருமணம் செய்ய உள்ள அந்த இளைஞருடன் கோட்டயத்தில் இருந்து ஆரியநாட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் ஆரியநாட்டில் ஒரு உறவினர் வீட்டுக்கு போவதாக கூறி உள்ளார்.

திருமண மோசடியில் ஈடுபட்ட ரேஷ்மா

ரேஷ்மாவை திருமணம் செய்ய தயாரான ஊராட்சி மன்ற உறுப்பினர் திருமணத்துக்காக சுமார் ஏழு லட்சம் ரூபாய் செலவு செய்ததாக புகாரில் கூறி உள்ளார்.

ஊராட்சிமன்ற உறுப்பினரை திருமணம் செய்துவிட்டு மறுநாள் தொடுபுழாவுக்கு புத்தகங்கள் வாங்குவதற்காக செல்ல வேண்டும் என கூறியிருக்கிறார். இதன்மூலம் திருமணம் ஆன மறுநாளே ஏமாற்றிவிட்டுச் செல்ல திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ரேஷ்மாவுக்கு 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. பலரையும் ஏன் திருமணம் செய்துகொண்டு ஏமாற்றினாய் எனக்கேட்டதற்கு, பணத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்துகொள்ளவில்லை. அன்புக்காகத்தான் திருமணம் செய்துகொண்டேன் என கூறுகிறார் ரேஷ்மா. ரேஷ்மாவை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினால் முழு விபரங்களும் தெரியவரும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.