Ravichandran Ashwin Punished, TNPL 2025: ஐபிஎல் தொடரை போன்ற தமிழ்நாட்டில் நடைபெறும் தமிழ்நாட பிரீமியர் லீக் தொடர் (Tamil Nadu Premier League) கடந்த ஜூன் 5ஆம் தேதி தொடங்கியது. 8 அணிகள் விளையாடும் இந்த தொடரின் லீக் போட்டிகள் கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 28 லீக் போட்டிகளும், 4 பிளே ஆப் போட்டிகளும் உள்பட 32 போட்டிகள் நடைபெறும்.
தற்போது முதற்கட்டமாக கோவையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்றுடன் 6 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 8) நடைபெற்ற போட்டியில் ரவிசந்திரன் அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் – சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் (IDream Tiruppur Tamizhans) மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 93 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக, 11.5 ஓவர்களிலேயே திருப்பூர் அணி இலக்கை அடைந்து வெற்றியை உறுதிசெய்தது.
Ravichandran Ashwin: 2 ரிவ்யூக்களை வேஸ்ட் பண்ணிய திண்டுக்கல்
இந்த போட்டியில் திண்டுக்கல் (Dindigul Dragons) பேட்டிங் செய்த முதல் ஓவரிலேயே அந்த அணி 2 ரிவ்யூக்களையும் இழந்தது. சிவம் சிங் பேட்டிங் பிடிக்க, மறுமுனையில் அஸ்வின் (Ravichandran Ashwin) இருந்தார். முதல் ஓவரை நடராஜன் வீசினார். அந்த ஓவரில் நடராஜன் 2 பந்துகளை அவுட் சைட் லெக் ஸ்ட்ம்ப் திசையில் வீசினார். ஆனால், டிஎன்பிஎல் தொடரின் புதிய விதியின்படி அது வைட் இல்லை. ஆனால் சிவம் சிங் 2 ரன்களுக்கு ஆசைப்பட்டு 2 ரிவ்யூக்களையும் ஒரு ஓவரில் பயன்படுத்தி, மொத்தத்தையும் இழந்தார். இதுவே அஸ்வின் கோபத்திற்குள்ளாக்கியது. ஆனால் அவர் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
Ravichandran Ashwin: அஸ்வினின் சர்ச்சையான அவுட்
அப்போது 5வது ஓவரை சாய் கிஷார் (Sai Kishore) வீசினார். அவர் ஓவர் தி ஸ்டம்ப் திசையில் இருந்து அவுட் சைட் லெக் லைனில் பந்தை போட்டார். அதை அஸ்வின் ஸ்வீப் ஆட முயன்றார், பந்து காலில்பட்டது. பந்துவீச்சாளர் முறையிட உடனே கள நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார். அதை ரிவ்யூ செய்வதற்கு திண்டுக்கலிடம் ரிவ்யூ இல்லாமல் போய்விட்டது. இதனால், கடுப்பான அஸ்வின் அவுட் கொடுத்த பெண் கள நடுவரிடம் அது அவுட் இல்லை, அவுட் சைட் லெக் லைன் பந்து என வாதிட்டார்.
Ravichandran Ashwin: அஸ்வினின் ஆக்ரோஷமான நடத்தை
ஆனால், நடுவரின் முடிவே இறுதியானது என்பதால் அஸ்வின் நடையைக்கட்ட வேண்டியதாகிவிட்டது. இதனால் அவர் கடும் அதிருப்தியில் பெவிலியன் திரும்பினார். பெவிலியன் திரும்பும் வழியில் தனது கால் பேடை பேட்டால் ஓங்கி அடித்தார். கை கிளவுஸை கழட்டி அதை பெவிலியன் நோக்கி ஆக்ரோஷமாக வீசினார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. பலரும் அஸ்வினின் செயல் கண்டனத்திற்குரியது என கருத்து தெரிவித்தனர்.
This is unacceptable from Ashwin his team wasted 2 reviews foe wide in 1st over itself and losing temper for Umpire decision is unfair.. Man has to be mature enough
pic.twitter.com/kN0Ct7c2Mq
— Karthick KR (@Karthick01988) June 9, 2025
Ravichandran Ashwin: அஸ்வினுக்கு அபராதம்
இதைத் தொடர்ந்து, களத்தில் கள நடுவரிடம் முறையிட்டதற்கு 10% அபராதமும், உபகரணங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக 20% அபராதமும் விதிக்கப்பட்டதாக டிஎன்பிஎல் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். மேலும், “போட்டிக்குப் பிறகு நடுவரின் விசாரணை நடத்தப்பட்டது. போட்டி நடுவரால் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு அவர் (அஷ்வின்) தண்டனைகளை ஏற்றுக்கொண்டார்” எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரின் போட்டி வருவாயில் இருந்து 30% அபராதம் வசூலிக்கப்படும்.
Ravichandran Ashwin: அஸ்வின் விளையாட தடை?
டிஎன்பிஎல் தொடரில் அஸ்வின் இதேபோல் ஆக்ரோஷப்படுவது முதல்முறையல்ல. கடந்தாண்டும் சக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரராக இருந்த சரத் குமாரை அஸ்வின் கடுமையாக மைதானத்திலேயே திட்டியது இதேபோல் பலத்த எதிர்ப்பை பெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்னரும் அஸ்வின், சாய் கிஷோருடன் களத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அஸ்வினின் இந்த தொடர்ச்சியான போக்கு மற்ற வீரர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும் அடுத்தடுத்து இதையே அஸ்வின் தொடர்ந்தால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.