மகாராஷ்டிர தேர்தல் விவரங்கள்: தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு ராகுல் காந்தி பாராட்டு

மும்பை: மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதாக அறிவித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றது என்றும், தற்போது, அதே உத்தியைப் பின்பற்றி, பிஹார் தேர்தலில் முறைகேடு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து அடிப்படை ஆதாரமில்லாமல் ராகுல் காந்தி இவ்வாறு குற்றச்சாட்டுகளைக் கூறக்கூடாது என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்திருந்தது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, ‘தேர்தல் ஆவணங்கள் தொடர்பாக, ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்துக்கு நேரடியாக எழுதி விளக்கம் கோராமல் ஊடகத்தில் தமது கருத்துகளையும் சந்தேகங்களையும் பதிவிட்டு மீண்டும் மீண்டும் விமர்சித்து வருகிறார்’ என்று தெரிவித்திருந்தன.

இந்நிலையில், ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள பதிவில் தேர்தல் ஆணையம் மீது மீண்டுமொரு முறை கடுமையான விமர்சனங்களை சுமத்தியிருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ”தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான ஜனநாயக அமைப்பாகும். அப்படியிருக்கும்போது, தமது குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படைத் தன்மையில்லாமல் தப்பிக்க நினைக்கும் மனப்போக்குடன் முக்கியமான பல கேள்விகளுக்கு மேம்போக்கான பதில்களை விளக்கமாக வெளியிட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதில் கூறும்போது மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் ஆவணங்களை வெளியிடத் தயார் என்று கூறியிருந்தது.

தேர்தல் ஆணையத்திஇந்த முடிவுக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, “தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுக்கள். இந்த அறிவிப்பானது ஒரு நல்ல முதல் படியாகும். தேர்தல் ஆவணங்களை வெளியிடும் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்குமா? மேலும் அந்த ஆவணங்கள் டிஜிட்டலிலோ அல்லது படிக்கும் வகையிலான வடிவில் இருக்குமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.