“ராஜ் குஷ்வாகா அப்பாவி… ‘சோனம் அக்கா’ என்றே அழைப்பார்…” – குடும்பத்தினர் பகிர்வு | மேகாலயா தேனிலவு கொலை

இந்தூர்: மேகாலயாவில் தேனிலவு கொலை வழக்கில் கைதான ராஜ் குஷ்வாகாவின் குடும்பத்தினர், அவரை அப்பாவி என்றும், இந்த வழக்கில் சதி காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அவரது தாய் சன்னி தேவி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறும்போது, “ராஜா ரகுவன்சியின் இறுதிச் சடங்குகள் முடிந்தவுடன் வீட்டுக்கு வந்த என் மகன் (ராஜ் குஷ்வாகா) கதறி அழுதான். அவனுக்கு நாங்கள் ஆறுதல் சொல்லியும் அழுகையை நிறுத்தவில்லை. எனது மகன் அப்பாவி. அவன் இந்த கொலை வழக்கில் திட்டமிட்ட சதி காரணமாக சிக்க வைக்கப்பட்டுள்ளான். எப்படி 20 வயதுடைய ஒருவரால் இப்படியொரு குற்றச் சம்பவத்தை செய்ய முடியும். எனது கணவரின் மறைவுக்கு பிறகு என் மகன் தான் குடும்பத்தை கவனித்து வருகிறான்” என தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் ராஜ் குஷ்வாகா. அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சோனத்தின் குடும்பத்துக்கு சொந்தமான ஃபர்னிச்சர் ஷீட் தொழிலில் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த தொழிலை சோனம் கவனித்து வந்துள்ளார். ராஜ் குஷ்வாகா தனது தாய் சன்னி தேவி மற்றும் மூன்று சகோதரிகளுடன் இந்தூரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு வரை அவர் படித்துள்ளார் என தகவல்.

“எனது அண்ணனுக்கும், சோனத்துக்கும் இடையே தொழிலாளி – முதலாளி என்ற புரிதல்தான் இருந்தது. சோனத்தை ‘தீதி’ (அக்கா) என்றுதான் அண்ணன் அழைப்பார். எனது அண்ணனை ‘பய்யா’ (சகோதரர்) என்றுதான் சோனம் அழைப்பார். என் அண்ணன் மீதான கொலை குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது” என ராஜ் குஷ்வாகாவின் தங்கை சுஹானி கூறியுள்ளார். இதனிடையே, ராஜா ரகுவன்சி கொலையானதை அடுத்து சோனத்தின் தந்தை தேவி சிங் ரகுவன்சிக்கு ராஜ் குஷ்வாகா ஆறுதல் சொல்லும் வீடியோ ஒன்றும் வைரல் ஆகியுள்ளது.

நடந்தது என்ன? – மத்தியப் பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனம் (25) என்பவருக்கும் கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தேனிலவை கொண்டாட மேகாலயா சென்றனர். கடந்த மே 23-ம் தேதி ராஜாவையும் சோனத்தையும் காணவில்லை. கடந்த ஜூன் 2-ம் தேதி மேகாலயாவின் சிரபுஞ்சியில் உள்ள வெய் சாவ்டாங் அருவி அருகே உள்ள பள்ளத்தாக்கில் ராஜா ரகுவன்சியின் உடல் மீட்கப்பட்டது.

மேகாலயா போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அவரது மனைவி சோனம், காதலர் ராஜ் குஷ்வாகா (21) மற்றும் ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை வழக்கு குறித்து மேகாலயா போலீஸார் கூறும்போது, “கடந்த மே 11-ம் தேதி ராஜா ரகுவன்சி, சோனம் திருமணம் நடைபெற்றது. கணவரை கொலை செய்துவிட்டு காதலர் ராஜ் குஷ்வாகாவுடன் நேபாளத்துக்கு தப்பிச் செல்ல சோனம் சதித் திட்டம் தீட்டினார். இதற்காக தேனிலவுக்கு செல்ல அவர் வலியுறுத்தினார். புது மனைவியின் விருப்பத்துக்கு மதிப்பளித்து மேகாலயாவில் தேனிலவை கொண்டாட ராஜா ஒப்புக் கொண்டார்.

இதனிடையே சோனமும் அவரது காதலர் ராஜ் குஷ்வாகாவும் செல்போனில் ரகசியமாக பேசி, ராஜா ரகுவன்சியை கொலை செய்ய விரிவான சதித் திட்டத்தை தீட்டினர். இதன்படி தனது நண்பர்கள் ஆகாஷ், விஷால் ஆகியோரை இந்தூருக்கு ராஜ் குஷ்வாகா வரவழைத்தார். அவர்களை சோனத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

ராஜா ரகுவன்சியும் சோனமும் தேனிலவுக்காக புறப்பட்டபோது ஆகாஷும் , விஷாலும் புதுமணத் தம்பதியை பின்தொடர்ந்தனர். அவர்களோடு ஆனந்த் என்பவரும் இணைந்து கொண்டார். யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக சோனத்தின் காதலர் ராஜ் குஷ்வாகா, இந்தூரிலேயே தங்கிவிட்டார். கடந்த மே 23-ம் தேதி ராஜா ரகுவன்சியும் சோனமும் மேகாலயாவின் சிரபுஞ்சியில் உள்ள வெய் சாவ்டாங் அருவிக்கு சென்றனர். அவர்களை ஆகாஷ், விஷால், ஆனந்த் பின்தொடர்ந்தனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி ராஜா ரகுவன்சியுடன் 3 பேரும் அறிமுகமாகினர்.

காதலன் ராஜ் குஷ்வாகா, சோனம், கொலை செய்யப்பட்ட ராஜா ரகுவன்சி.

புதுமண தம்பதியுடன் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் உடன் சென்றார். தனிமையில் பொழுதை கழிக்க வேண்டும் என்று கூறி அந்த சுற்றுலா வழிகாட்டியை சோனம் திருப்பி அனுப்பிவிட்டார். பின்னர் செல்பி புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறி சிசிடிவி கேமராக்கள் இல்லாத மலை உச்சிக்கு கணவர் ராஜா ரகுவன்சியை, சோனம் தனியாக அழைத்து சென்றுள்ளார். அப்போது ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் பின்தொடர்ந்து வந்து ராஜா ரகுவன்சியை கோடரியால் தலையில் பலமாக தாக்கி உள்ளனர். படுகாயமடைந்த அவர் கீழே சரிந்து விழுந்தார். ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அப்போது ஆகாஷ் உள்ளிட்ட 3 பேருடன் சோனமும் இணைந்து ராஜா ரகுவன்சியை சுமார் 200 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசியுள்ளார். பின்னர் 4 பேரும் இரு மோட்டார் சைக்கிள்களில் சுமார் 25 கி.மீ. தொலைவு பயணம் செய்துள்ளனர். இதன்பிறகு ரயில், பேருந்துகள் மூலம் அவரவர் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

சோனத்தின் காதலர் ராஜ் குஷ்வாகா உத்தர பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர். அந்த மாநிலத்தில் காதலரின் நண்பர்கள் வீடுகளில் சோனம் பாதுகாப்பாக தங்கி உள்ளார். ஆனால் ராஜ் குஷ்வாகா, ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதால் வேறு வழியின்றி சோனமும் தானாக முன்வந்து சரண் அடைந்துள்ளார்.

ராஜா ரகுவன்சியை கொலை செய்ய ரூ.20 லட்சம் வழங்குவதாக சோனம் வாக்குறுதி அளித்திருக்கிறார். சில லட்சங்களை அவர் முன்பணமாக வழங்கியிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் ரூ.9 லட்சம் ரொக்கமும் ஏராளமான தங்க நகைகளும் இருந்தன” என்று மேகாலயா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.