புதுடெல்லி: இந்தியாவில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது உலகின் மிகவும் கடுமையான மற்றும் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற சர்வதேச தேர்தல் ஒருமைப்பாடு மாநாட்டில் சிறப்புரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “இந்தியாவில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது என்பது உலகின் மிகவும் கடுமையான மற்றும் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்றாகும். இது தேர்தல் செயல்முறையின் துல்லியம் மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துகிறது.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போதும் தேர்தலுக்கு முன்பும் ஒவ்வொரு ஆண்டும் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. 1960 முதல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வாக்காளர் பட்டியல் பகிரப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் தொடர்பான கோரிக்கைகள், ஆட்சேபனைகள் மற்றும் மேல்முறையீடுகளும் வழங்கப்படுகின்றன. இந்த வலுவான வழிமுறை பல ஆண்டுகளாக நாடு முழுவதும் தேர்தல் நம்பகத்தன்மையை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், காவல்துறை, செலவின பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்கள் பல்வேறு கட்டங்களில் தணிக்கையாளர்களைப் போலவே செயல்படுகின்றன.
தேர்தல்களை நடத்தும் நேரத்தில் வாக்குச் சாவடி ஊழியர்கள், காவல் துறை, பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் உட்பட 2 கோடிக்கும் அதிகமான பணியாளர்களுடன், தேர்தல் ஆணையம் உலகின் மிகப் பெரிய அமைப்பாக மாறுகிறது. பல தேசிய அரசாங்கங்கள் மற்றும் முக்கிய உலகளாவிய நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பணியாளர்களை விஞ்சி, இந்தியாவின் கிட்டத்தட்ட 100 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது,” என்று தெரிவித்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து எதிர்க்கட்சிகள், குறிப்பாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சனங்களை வைத்துள்ள நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் இந்த உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.