தோஹா,
கத்தாரில் வசித்து வந்த 28 இந்தியர்கள், விடுமுறையை கழிப்பதற்காக கென்யாவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு பஸ்சில் சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். நியான்டருவா மாவட்டத்தில் ஓல் ஜோரோராக்-நகுரு சாலையில் சென்றபோது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். 23 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இத்தகவலை கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், களத்தில் இருந்து உதவி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. பலியானோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. தோஹாவில் உள்ள இந்திய சமூக அமைப்புகளை தொடர்பு கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது. பலியான 5 பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளதாக, கேரள முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.