காசாவில் நிவாரண உதவி மையம் அருகே இஸ்ரேல் தாக்குதல் – 25 பேர் உயிரிழப்பு

காசா முனை,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.

பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 58 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

அதேவேளை , இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துளனர். இந்த போர் ஓராண்டுக்குமேல் தொடர்ந்து நீடித்து வருகிறது.போரால் காசா முனையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. காசாவுக்கு பல்வேறு நாடுகள் நிவாரண பொருட்கள் அனுப்பி வருகின்றன.

இந்த நிவாரண பொருட்களை அமெரிக்க தொண்டு நிறுவனம் காசாவில் விநியோகித்து வருகிறது. இந்நிலையில், காசாவின் ரபாவில் நேற்று நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. அப்போது, அங்கு ஏராளமான பாலஸ்தீனியர்கள் குவித்தனர். அப்போது, திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிசூடு தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தநிலையில், தற்போது பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 70க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ராணுவ முகாம் அருகே சந்தேகத்துக்கிடமான நபர்கள் இருந்ததால் அவர்களை நோக்கி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஹமாஸ் போராளிகள் வேண்டுமென்றே உதவி விநியோகத்தை சீர்குலைத்ததாக குற்றம் சாட்டி உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.