ஜெய்ஸ்வாலால் அணியை விட்டு விலகும் சஞ்சு சாம்சன்? சிஎஸ்கேவில் இணைகிறாரா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த சீசன் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. 14 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருந்தனர். அதே போலவே கேப்டன் சஞ்சு சாம்சனுக்கும் இந்த சீசன் சரியாக அமையவில்லை. சில போட்டிகளில் காயம் காரணமாக வெளியேறியதால் அணியை சரியான முறையில் வழிநடத்த முடியமால் போனது. சஞ்சு சாம்சன் இல்லாத சமயத்தில் ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். இருப்பினும் அவராலும் எந்த ஒரு மாற்றத்தையும் அணிக்குள் கொண்டுவர முடியவில்லை. 

ஐபிஎல் 2025 போட்டிகள் தற்போது முடிவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன்சி பொறுப்பை கேட்பதுதான் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் இருவருக்கும் இடையே கேப்டன்சி தகராறு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சியில் இருந்து வெளியேறினார். தற்போது அதே நிலைதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

யஷஸ்வி ஜெய்ஸ்வால் கேப்டன்?

இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனக்கு கேப்டன்சி பதவி வேண்டும் என்று கேட்பதாகவும், இதற்கு அணி நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சஞ்சு சாம்சனுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் அவரை விடுவிக்கலாம் என்ற யோசனையில் அணி நிர்வாகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன் 2 பெரிய அணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவைப்படுகிறது. இதனால் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவாரா என்ற கேள்வியும் இருந்து வருகிறது. 

யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியின் முக்கியமான வீரராக இருந்து வருகிறார். டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலின் இடம் உறுதிப்படுத்தப்பட்டது என்றாலும், டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அவரது பெயர் கட்டாயமாக இடம்பெறுவதில்லை. இதனால் தனக்கு கேப்டன்சி வேண்டுமென்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் கேட்பதாக கூறப்படுகிறது. மூன்று ஃபார்மடிலிலும் தான் சிறந்த வீரர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று போராடி வருகிறார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். அடுத்த மெகா ஏலம் 2027 ஆம் ஆண்டு தான் நடைபெற உள்ளது.  அதுவரையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருப்பாரா அல்லது வெளியேறுவாரா என்பது கேள்விக்குறியே. ஜெய்ஸ்வாலுக்கு முன்பு கேப்டன்சி ரேஸில் ரியான் பராக் இருந்தாலும் ஜெய்ஸ்வாலுக்கு கொடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.