“தவெக தலைவர் விஜய் ஓர் எடுப்பார் கைப்பிள்ளை” – ஜவாஹிருல்லா கருத்து

மதுரை: “தவெக தலைவர் விஜய் ஓர் எடுப்பார் கைப்பிள்ளை என தெளிவாக தெரிகிறது. அவர் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரியையே கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக்கியதால் அவர் தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்” என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

மதுரையில் இன்று மனித நேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது: “மதுரையில் ஜூலை 6-ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சிறுபான்மை சமூகத்தினருக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி, மாநாடு நடத்தவுள்ளோம்.

அரசியல் பிரதிநிதித்துவப்படி இந்தியாவில் தற்போதுள்ள 776 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 39 பேர் முஸ்லிம்கள். மாநிலங்களவையில் 15 பேர், மக்களவையில் 24 பேர் உள்ளனர். 543 உறுப்பினர்களை யுடைய மக்களவையில் 4.42% மட்டுமே முஸ்லிம் உள்ளனர். இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களில் 12 மாநிலம், 3 யூனியன் பிரதேசத்திலிருந்து முஸ்லிம் தேர்வாகியுள்ளனர். 2024 எம்.பி தேர்தலில் 24 முஸ்லிம்கள் தேர்வாகியுள்ளனர்.

இந்தியா முழுவதும் 4,123 எம்எல்ஏக்களில் 296 எம்எல்ஏக்கள் முஸ்லிம்கள். தமிழகத்தில் முஸ்லிம்கள் மக்கள் தொகை 7% உள்ளனர். ஆனால் 234 எம்எல்ஏக்களில் 14 பேர் இருக்க வேண்டிய நிலையில் 7 முஸ்லிம்கள் மட்டுமே எம்எல்ஏக்களாக உள்ளனர்.

அதேபோல் உள்ளாட்சி மன்றங்களிலும் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் குறைந்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 9% முஸ்லிம்கள் உள்ளனர். அதன்படி 18 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் 4 பேர் மட்டுமே உள்ளனர். எனவேதான் அரசியல் கட்சிகள் சிறுபான்மை மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அழுத்தம் திருத்தமாக சொன்னார். ஆனால், தற்போது வரை உரிய பிரதிநிதித்துவம் வழங்கவில்லை.

அதேபோல்தான் வக்பு திருத்தச் சட்டமும். கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள் முஸ்லிம்களை வேட்பாளராக்கி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள். கொள்கை ரீதியாக பாசிசத்தை எதிர்க்கும் திமுக கூட்டணியில் உள்ளோம்.

தவெக கட்சியை விஜய் தற்போது ஆரம்பித்துள்ளார். அவர்களது கொள்கைகள், செயல்பாடுகளை வைத்து காலப்போக்கில் தான் முடிவு செய்ய முடியும். மத்திய அரசின் ஊழியராக இருந்து விஜய் வீட்டில் சோதனை நடத்தியவருக்கு உடனடியாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக அறிவித்தபோதே, விஜய் தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். அவர் ஓர் எடுப்பார் கைப்பிள்ளை என தெளிவாகத் தெரிகிறது.

ஐ.நா-வின் சிறுபான்மை மக்களின் உரிமை பிரிவு, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையினருக்கு விகிதாச்சார அடிப்படையில் தனித் தொகுதிகள் வழங்க வேண்டும் என்ற திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த வேண்டும். திமுக ஆட்சியில் மக்களுக்கு தேவயான நலத்திட்டங்கள் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியைப் பற்றி பேச மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தகுதி இல்லை” என்று எம்.எச்.ஜவாஹிருல்லா கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.