திருமணத்துக்குப் பிறகு விரும்பியவருடன் வாழ முடியவில்லை என்ற கவலையால் தற்கொலையும், ஆத்திரத்தில் கொலையும் நடக்கிறது. அப்படி சமீபமாக இந்தியாவில் நடக்கும் கொலைகள் அதிர்ச்சியளிக்கிறது. தற்போது இந்திய அளவில் விவாதமாகியிருப்பது மத்தியப்பிரேதசத்தின் சோனம் வழக்கு. இது போன்று மேலும் சில வழக்குகளும் சமீபத்தில் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியது.

சோனம் வழக்கு:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்ஷிக்கும் (30) சோனம் (27) என்பவருக்கும் மே 11-ம் தேதி திருமணம் நடந்தது. மே 20-ம் தேதி இருவரும் மேகாலயாவின் காசி ஹில்ஸுக்கு ஹனிமூன் சென்றனர். கடந்த 23-ம் தேதி இவர்களது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில் திருமணத்திற்கு முந்தைய காதலை மறக்க முடியாமல் தனது கணவரை காதலன் துணையுடன் கூலிப்படையை வைத்து மனைவியே கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் இந்த விவகாரத்தில் சோனம் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

சிமென்ட் டிரம்மில் சடலம்:
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் சௌரஃப் ராஜ்புத்(35). லண்டனில் வேலை செய்துவந்த இவர் கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி மனைவியை சந்திக்கும் ஆசையுடன் இந்தியா வந்தார். சர்பிரைஸ் கொடுக்கும் எண்ணத்தில் வந்தவருக்கு சௌரஃப் ராஜ்புத்தின் மனைவி முஸ்கன் ரஸ்தோகி அவரின் காதலன் சாஹில் சுக்லாவுடன் ஒன்றாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத முஸ்கன் ரஸ்தோகி காதலனுடன் சேர்ந்து சௌரஃப் ராஜ்புத்ஹை கொலை செய்தார்.
அவரின் உடலை அப்புறப்படுத்துவதற்காக அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி பெரிய ட்ரம்மில் போட்டு சிமெண்ட் மூலம் சமாதி கட்டியிருக்கின்றனர். அதற்குப்பிறகு இருவரும் சேர்ந்து கணவரின் செல்போனுடன் சிம்லா சென்றிருக்கின்றனர். சிம்லாவிலிருந்து சௌரஃப் ராஜ்புத் போல மெசெஜ் அனுப்பியதால் சந்தேகமடைந்த அவரின் குடும்பத்தினர் மூலம் இந்தக் கொலை வெளியே வந்தது.

இன்ஸ்டாகிராம் ரீலும் கொலையும்:
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வர் ராய். இவரின் மனைவி ராணி சமூக ஊடகத்தில் அடிக்கடி வீடியோக்கள் பதிவிடுவது வழக்கமாக கொண்டிருக்கிறார். நடன வீடியோக்கள் மகேஷ்வர் ராயின் குடும்பத்தார் மத்தியில் விமர்சிக்கப்பட்டது. அதனால், மகேஷ்வர் ராய் தொடர்ந்து மனைவியிடம் இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்ற வேண்டாம் எனக் கேட்டியிருக்கிறார். இதனால் இருவருக்கும் மத்தியில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டிருக்கிறது. அதனால், ராணி, மகேஷ்வர் ராய் தூங்கும்போது அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். அதை தற்கொலைப் போல வீட்டில் தொங்கவிட்டிருக்கிறார். இந்தக் கொலைக்கு ராணியின் சமூக ஊடக நண்பர்கள் உதவியதாக குற்றம்சாட்டப்பட்டது.
பிவானி, ஹரியானா சம்பவம்
ஹரியானாவின் பிவானி மாவட்டம் ரேவாரியைச் சேர்ந்த யூடியூபர் ரவினா. இவருக்கும் பிரவீன் என்பவருக்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், திருமணத்துக்கு முன்பே ரவினா சுரேஷ் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், மார்ச் 25 அன்று ரவினாவையும் சுரேஷையும் பிரவீன் ஒன்றாக இருப்பதை பார்த்திருக்கிறார். அதனால் இருவருக்கும் மத்தியில் சண்டை ஏற்பட்டிருக்கிறது. அதனால் அன்றிரவு, பிரவீனை கொலை செய்துவிட்டு, அவரின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் சுரேஷும், ரவினாவுக் கொண்டு சென்று நகரத்திற்கு வெளியே உள்ள ஒரு வடிகாலில் வீசினர். சடலம் கிடைத்தப் பிறகுதான் காவல்துறை இந்தக் கொலையை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவந்தது.

பல்வேறு காரணங்களால் காதலர்களை கரம்பிடிக்க முடியாத சிலர், தொடர்ந்து காதலர்களுடன் தொடர்பில் இருப்பதும், அதனால் இதுபோன்ற குற்றங்கள் நடப்பது தொடர்கதையாகியிருக்கிறது. இத்தகைய தீவிர நடவடிக்கைகளுக்கு உந்துதல் தரும் உளவியல், சமூக, சட்ட காரணங்கள் குறித்து ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் என விவாதிக்கப்படுகிறது.
அதே நேரம், ஒரு பெண்ணையோ, ஆணையோ திருமணம் வரை மட்டுமே பெற்றோரால் கட்டுப்படுத்த முடியும். அதற்குப்பிறகு அவர்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக்கொள்ளும் சுதந்திரம் இயல்பிலேயே வந்துவிடுகிறது. எனவே, விருப்பமில்லாத திருமணத்தை பெற்றோரும், திருமணம் செய்துகொள்பவர்களும் நடத்திவைக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ கூடாது என மற்றொரு தரப்பினரும் விவாதங்களை சமூக ஊடகத்தில் முன்னெடுக்கின்றனர்.