அகமதாபாத்: அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் முன்பகுதி, அகமதாபாத் பிஜே மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மாணவர்கள் விடுதியின் கூரையின் மீது விழுந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட விமானம், 5 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்த ஏர் இந்தியா 171 என்ற எண் கொண்ட இந்த விமானம் விழுந்த இடம் குறித்த முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து பேசிய ஒரு மூத்த காவல் துறை அதிகாரி , “லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக எங்களுக்குத் தெரிய வந்தது. 2-3 நிமிடங்களுக்குள் காவல் துறையினரும், பிற மீட்பு அமைப்புகளும் சம்பவ இடத்தை அடைந்தன. கிட்டத்தட்ட 70 – 80% பகுதியில் மீட்புப் பணிகள் நடந்துள்ளன. அனைத்து நிறுவனங்களும் இங்கு வேலை செய்கின்றன” என்றார். விமானம் ஒரு குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அப்பகுதியில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதா என்பது இன்னும் தெரியவரவில்லை.
விபத்து நடந்த இடத்திலிருந்து ஆம்புலன்ஸ்கள் செல்ல எளிதான வழிகள் அனைத்தும் தயாராக உள்ளன என்று அகமதாபாத் காவல் துறையினர் தெரிவித்தனர். காவல் துறையின் அறிக்கையில், “விமானம் ஒரு மருத்துவ மாணவர் விடுதி கட்டிடத்தின் மீது மோதியது. அனைத்து பத்திரிகையாளர்களும் எங்களுடன் ஒத்துழைக்குமாறும், காவல்துறையினரும், மற்ற மீட்புக்குழுவினரும் சாலைகளை தயார் நிலையில் வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். இதனால் நாங்கள் பசுமை வழித்தடத்தை உருவாக்க முடியும். அதேபோல ஆம்புலன்ஸ்கள் எளிதாக செல்லவும் அனுமதிக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமான நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் தற்போது செயல்படவில்லை. அனைத்து விமான நடவடிக்கைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடம் பேசி, அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிட அகமதாபாத்துக்கு விரைந்து வருவதாக அமைச்சர் ராம்மோகன் நாயுடு, பிரதமரிடம் தெரிவித்தார். தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும், நிலைமை குறித்து தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.