சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் (பார்க்கிங்) வாகனங்களை ஒழுங்காக வரிசைப்படுத்தாததால், மீண்டும் இடநெருக்கடி பிரச்சினை தலைதூக்கியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவையில், விம்கோ நகர் – விமானநிலையம், சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் உள்ள நிலையங்களுக்கு பயணிக்க, ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலையத்தில் மாறிக் கொள்ளும் வசதி இருப்பதால், இந்நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.
‘ஹவுஸ்புல்’ – ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இடதுபக்க பார்க்கிங் பகுதியில் 1,300 டூவீலர்கள், 190 கார்களை நிறுத்தும் வசதி உள்ளது. இந்த பார்க்கிங் பகுதி முழுமையாக நிரம்பிவிடுவதால், கூடுதலாக 300 டூவீலர்களை நிறுத்தும் விதமாக, புதிய வாகன நிறுத்தம் பகுதி, வலது பக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் திறக்கப்பட்டது. ஆனால், இங்கும் காலை 10 மணிக்குள் நிரம்பி விடுவதால், ‘ஹவுஸ்புல்’ என்று பலகை வைத்து, மறுபக்கத்தில் உள்ள பார்க்கிங் பகுதிக்கு செல்லும்படி கூறுகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக இரண்டு பகுதிகளிலும் இடமில்லை என்று கூறி, பார்க்கிங் பகுதிக்கான கதவுகளை மூடி விடுகின்றனர். இதனால், வாகனங்களுடன் வரும் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இப்பிரச்சினைக்கு முதன்மையான காரணம், பார்க்கிங் பகுதியில், காலையில் வரும் பயணிகள் வாகனங்களை வரிசையாகவும், ஒழுங்காகவும் நிறுத்துவதில்லை. 5 வாகனங்கள் நிறுத்துவதற்கான இடத்தில் 3 வாகனங்களை நிறுத்துகின்றனர். இதை பார்க்கிங் பொறுப்பாளர்களும் கண்டுகொள்வதில்லை. இதை ஒழுங்குபடுத்தினால் கூடுதலான வாகனங்களை நிறுத்த முடியும்.
இதுகுறித்து, ஆலந்தூரைச் சேர்ந்த பயணிகள் சிலர் கூறியதாவது: ஆலந்தூர் மெட்ரோ ரயில் இருசக்கர பார்க்கிங் பகுதியில் இடமில்லை என்று கூறி வாகனங்களை நிறுத்த அனுமதி மறுக்கப்படுகிறது. பார்க்கிங் பகுதியில் சீரற்ற முறையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை ஒழுங்குபடுத்தினால் கூடுதலாக 20 முதல் 30 வாகனங்களை நிறுத்த முடியும். இதை எல்லாம் கண்காணித்து, முறைப்படுத்த போதுமான ஊழியர்கள் இல்லை.
கூடுதல் பணியாளர்கள்… எனவே, கூடுதல் பணியாளர்களை நியமித்து இதை ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும் பயணிகளும் வாகனங்களை சீராக நிறுத்தினால் இந்தப் பிரச்சினை ஏற்படாது. இதுதவிர, வாகன நிறுத்துமிடங்களில், ஆங்காங்கே, மாதக்கணக்கில் வாகனங்கள் சங்கிலியால் பூட்டப்பட்டு கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றை உரிய முறையில் அகற்றி வேறு இடத்தில் நிறுத்தினால், கூடுதல் வாகனங்களை நிறுத்த வசதியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.