திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (65).
இவரது மனைவி சாமியாத்தாள் (60). இவர்களுக்கு வித்யாசாகர் (33) என்ற மகனும், அபிநயா (36) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் மகன் வித்யாசாகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதற்கு உடன்படாத வேலுச்சாமி, மனைவி சாமியாத்தாளுடன் சண்டை போட்டு விட்டு, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் பிரிந்து அவரின் சொந்த ஊரான கரூர் மாவட்டம், சின்ன தாராபுரத்திற்குச் சென்றுவிட்டார்.
வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தில் சாமியாத்தாள் அவரது மகன் வித்யாசாகர் மற்றும் மருமகள் ஆகியோர் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில், புதன்கிழமை காலை வழக்கம்போல் சாமியாத்தாள் தோட்டத்திற்கு ஆடுமேய்க்கச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த வேலுச்சாமி, சாமியாத்தாளுடன் மகன் திருமணம் குறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கற்களால் சாமியாத்தாளை வேலுச்சாமி தாக்கியுள்ளார்.
இதில், மயக்கமடைந்த சாமியாத்தாளின் வாயில் தென்னை மர மாத்திரையைத் திணித்து கொலை செய்துள்ளார். பின்னர் மனைவி இறந்ததை உறுதி செய்துகொண்ட வேலுச்சாமி மறைத்து வைத்திருந்த தென்னை மர மாத்திரையைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரமாகியும் தாய் சாமியாத்தாள் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்து வித்யாசாகர் தோட்டத்துக்குள் சென்று பார்த்தபோது இருவரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.

தகவலறிந்த வெள்ளகோவில் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது சாமியாத்தாளுக்குப் பின்தலையில் இரத்தக் காயத்துடனும், வேலுச்சாமியின் வாயில் நுரை வந்த நிலையிலும் இறந்து கிடந்துள்ளனர்.
சோதனை மேற்கொண்ட போலீசார் திருப்பூரில் இறந்து மேப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
பிரேதத்தைக் கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசுார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டதற்காகத் தனது மனைவியைக் கணவனே வெட்டிக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.