சென்னை: நகராட்சி நிர்வாக துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.399.81 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 102 திட்ட பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.975.63 கோடி மதிப்பீட்டில் 108 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை, ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.399.81 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 102 திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ரூ.975.63 கோடி மதிப்பீட்டில் 108 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணிகளுக்கு தேர்வான 49 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கடற்கரைக்கு சென்று வர பேட்டரி வாகனம், குப்பை பெருக்கும் இயந்திர வாகனங்கள், நாய் பிடிக்கும் வாகனங்களை தொடங்கி வைத்தார்.
ஊக்கத் தொகை வழங்கல்: தொடர்ந்து, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள், உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் என 114 நபர்களுக்கு ரூ.7.26 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அமைக்கப்பட்ட 4 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
சிங்கார சென்னை திட்டம்: பின்னர் அவர் பேசியபோது, ‘‘முதல்வர் ஸ்டாலின், மேயராக இருந்தபோது, சிங்கார சென்னை என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். தற்போது சென்னையில் குடிநீர் பஞ்சம் கிடையாது. தற்போது ரூ.58 கோடி மதிப்பீட்டில் உள்ளகரம் கால்வாய், வீராங்கல் ஓடை உள்ளிட்ட பல்வேறு கால்வாய்களை தூர்வாரி மேம்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். இதுபோன்ற வசதிகளை பயன்படுத்திக் கொள்வதுடன், பேணி பாதுகாப்பதும் பொதுமக்களின் பொறுப்பு’’ என்றார்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு, சசிகாந்த் செந்தில், பரந்தாமன் எம்எல்ஏ, நகராட்சி நிர்வாக துறை செயலர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.