புதுடெல்லி: நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் வேளையில் பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்ட மாநில பாஜக நிர்வாகிகள் நேற்று அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
முன்னதாக அனைத்து அமைச்சர்களும் கரோனா பரிசோதனைக்கு உட்படுவது அவசியம் எனவும் பிரதமருடன் மேடையில் இருப்பவர்களும் தங்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை அட்டையை காண்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவி வரும் வேளையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 7,121 ஆக உயர்ந்தது. இதில் 2,223 நோயாளிகளுடன் கேரளா முதலிடத்திலும் 1,223 நோயாளிகளுடன் குஜராத் இரண்டாமிடத்திலும் உள்ளன. இதையடுத்து டெல்லி 757, மேற்கு வங்கம் 747, மகாராஷ்டிரா 615, கர்நாடகா 459, உத்தரபிரதேசம் 229, தமிழ்நாடு 204, புதுச்சேரி 10, ஹரியானா 125, ஆந்திரா 72, ம.பி. 65, கோவா 6 என்ற எண்ணிக்கையில் நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.
74 பேர் உயிரிழப்பு: இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 74 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மூத்த குடிமக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். என்றாலும் தற்போதைய வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் லேசானவை என்றும், பீதி அடையத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.